'20 ரூபாய் டாக்டர்' ஜெகன்மோகன் மாரடைப்பால் மரணம்.. பொதுமக்கள் கண்ணீர்
சென்னை டாக்டர் ஜெகன்மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
Recommended Video
சென்னை: மந்தைவெளியை சேர்ந்த டாக்டர் ஜெகன்மோகன் மாரடைப்பால் காலமானார்!
கடவுளின் மறுஉருவமாக கருதக்கூடியவர்கள் மருத்துவர்கள். இந்த தொழிலை தன் உயிராகவும், உறவாகவும், உன்னதமாகவும் கடைசிவரை பாவிப்பவர்கள் அரிதே. அதில் ஒருவர்தான் டாக்டர் ஜெகன்மோகன்.
1 ரூபாய்
டாக்டருக்கு படித்து முடித்ததுமே சேவை என்ற அஸ்திரத்தை கையிலெடுத்தார். இந்த அஸ்திரம்தான் அவரை இறுதிவரை கைபிடித்து அழைத்து சென்றது. ஆயிரக்கணக்கான மக்களை உயிர் பிழைக்க செய்தது. 1975-ல் புதிதாக ஆரம்பித்த தன் சந்திரா கிளினிக்கில் வரும் நோயாளிகளிடம் ஒரு ரூபாய் வாங்கி கொண்டுதான் சிகிச்சை அளித்தார்.
20 ரூபாய் புகழ்
ஆனால் தன்னிடம் வேலைபார்க்கும், நர்ஸ், கரண்ட் பில் கட்டுவதற்கு நோயாளிகளிடம் வாங்கும் இந்த ஒரு ரூபாய் கட்டுப்படியாகவில்லை. அதனால் 20 ரூபாய் வாங்க ஆரம்பித்தார். எப்போது இவர் 20 ரூபாய் வாங்க ஆரம்பித்தாரோ அது முதல் தன் நோயாளிகளிடம் ஒருபைசா கூட அதிகமாக வாங்கியது இல்லை. 20 ரூபாய் டாக்டர் என்ற பெயர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. குறைந்த கட்டணம், தரமான சிகிச்சை என்ற பெயர் டாக்டர் ஜெகன்மோகனுக்கு ரொம்ப சீக்கிரத்திலேயே ஒட்டிக் கொண்டது.
திடீர் மாரடைப்பு
ஒருநாளைக்கு 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து குவிந்துகொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் 20 ரூபாய் கூட இல்லாதவர்களுக்கு இலவசமாகவே ஊசி போட்டு மருந்துகொடுத்து அனுப்பி விடுவாராம். இவருக்கு வயது 76. நேற்றிரவு டாக்டருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் காப்பாற்ற முடியாமல் உயிர் பிரிந்தது.
கண்ணீர் அஞ்சலி
டாக்டர் ஜெகன்மோகன் மறைவு கேட்டு பகுதிமக்கள் குவிந்தார்கள். சோகத்தில் மூழ்கியுள்ளார்கள். தங்கள் கண்ணீரில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறாக்ள. 20 ரூபாய் டாக்டர் என்று மக்கள் எப்போது சொல்ல தொடங்கினார்களோ,அன்றைய காலத்திலிருந்து, நேற்றுவரை 20 ரூபாயைதான் ஃபீஸாக வாங்கியிருக்கிறார்.
மறக்க முடியாத டாக்டர்
பிணத்தை வைத்துக் கொண்டு பணம் பண்ணும் செய்திகள் தற்போது வந்து கொண்டிருக்கும் நிலையில், தன் தொழிலையும், மக்களையும் நேசித்த டாக்டர் ஜெகன்மோகனின் மறைவினை அந்த பகுதி மக்கள் தங்கள் உயிருள்ள வரை மறக்க மாட்டார்கள்.