சென்னையில் இடியுடன் கூடிய மழை; உள் மாவட்டங்களில் கனமழை- வானிலை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் சில இடங்களில் மாலையோ அல்லது இரவிலோ இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மழை மறைவு பிரதேசமாக இருந்தாலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் பரவலாக மழை பெய்தது.
அடையார், கிண்டி, ஆதம்பாக்கம், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பெய்த மழையால் வெள்ளநீர் தேங்கியது. காலை நேரத்தில் பெய்த மழையால் பள்ளி, அலுவலகத்திற்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
தலைநகர் சென்னையில் சில இடங்களில் மாலையோ அல்லது இரவிலோ இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
பதிவான மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஓமலூரில் 10 செ.மீ மழையும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 9 செ.மீ மழையும், சென்னை மீனம்பாக்கத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மழைஅளவு ஊத்தங்கரை- 5.6 செமீ பெணுகொண்டாபுரம் - 8.2 மீ, கிருஷ்ணகிரி - 6.7 செ.மீ, நெடுங்கல் - 4.2 செ.மீ பாரூர் - 5.2. செ.மீ சூளகிரி - 8. செ.மீ, ராயக்கோட்டை - 7.3 செ.மீ., ஓசூர் - 4.2 செ.மீ என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் - 63.68 செ. மீ மழை பதிவாகியுள்ளது.