தொடங்கிய 2வது நாளே புட்டுக்கிச்சி மெட்ரோ சுரங்க ரயில்… பாதியில் இறக்கியதால் பயணிகள் கொந்தளிப்பு
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் முதல்வர் பழனிச்சாமியும் தொடங்கி வைத்த இரண்டாவது நாளே மெட்ரோ சுரங்க ரயில் இரவு நேரத்தில் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கொந்தளித்துள்ளனர்.
சென்னை: மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு மற்றும் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்ட சென்னை மெட்ரோ சுரங்க ரயில் இரண்டாவது நாளிலேயே பொது மக்களின் பெரும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளது.
புதியதாய் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆசைப்பட்ட பயணிகள் தங்களது பிள்ளை குட்டிகளுடன் ஜாலியாக கிளம்பிப் போய் டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயிலில் ஏறினால் அவர்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
இரண்டு குடும்பத்தினர் குழந்தைகளோடு சென்னை நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர் திருமங்கலம் வரை சுரங்க ரயிலில் சென்று வர திட்டம் போட்டனர். இதற்காக நேரு பூங்கா சென்ற அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் எடுத்துள்ளனர். அவர்களுடன் அப்போது சுமார் 50 பேர் வரிசையில் நின்று அவர்களும் டிக்கெட் எடுத்துள்ளனர்.

தாமதம்
ரயில் நிலையத்தில் இருந்த பணிப்பெண் சொன்னது போல் 2 நிமிடங்களில் ரயில் வந்தது என்றாலும் 10 நிமிடங்கள் ஆகியும் அங்கிருந்து ரயில் புறப்படவே இல்லை. அதே நேரத்தில் இதுதான் கடைசி ரயில் என்று அறிவிப்பும் ரயில் நிலைய ஒலிபெருக்கி அறிவித்தது. ரயில் கிளம்பும் போது மணி இரவு 9.55 மணி.

காத்திருப்பு
நேரு பூங்காவில் இருந்து புறப்பட்ட மெட்ரோ ரயில், வரும் ரயில் நிலையங்களில் எல்லாம் 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை நின்று சென்றன. இதனால் கால தாமதம் ஆகிறது என்று பதற்றம் அடைந்த பயணிகள் தங்களது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் இறங்கத் தொடங்கினர்.

பாதியில் நிறுத்தம்
இந்த ரயில் அண்ணாநகர் டவர் நிலையத்தில் வந்த போது, பயணிகள் சிலர் இறங்கினார்கள். அப்போது, எதிர் புறம் நேரு பூங்கா செல்லும் அறிவிப்புடன் நின்ற ரயிலில் குழந்தை குட்டிகளோடு பயணிகள் ஓடிச் சென்று ஏறினார்கள். அந்த இடத்திலும் 15 நிமிடங்கள் காத்திருப்புக்கு பின்னர் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலும் ஷெனாய் நகர் நிறுத்தத்திலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டனர்.

ஆட்டோவில் பயணம்
ரயிலில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்ட போது, நள்ளிரவைத் தொட 30 மணி நேரமே மிச்சமிருந்தது. சரியாக 11.30 மணிக்கு ஷெனாய் நகரில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் ஆட்டோவில் ஏறி சேர வேண்டிய இடத்திற்கு சென்றனர். ஜாலியாக குழந்தைகளுடன் பயணம் செய்யச் சென்ற பயணிகள் குழந்தை குட்டிகளுடன் மன வருத்தத்துடன் வீடு திரும்பினர்.
வைரல் வீடியோ
இதுகுறித்து, மெட்ரோ ரயில் பணியாளர் ஒருவரிடம் பயணிகள் கேட்ட போது சரிவர பதில் தராததால் அங்க வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications