பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எங்கள் மீது சேற்றை வாரி வீசுவதா... அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எங்கள் மீது சேற்றை வாரி வீசுவதா என்று நடிகர் கமலஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தான் நடத்தும் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காக தமிழக அரசின் மீது குறை கூறுவது சரியல்ல என்று அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள காயத்ரி ரகுராம், சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதை எடிட் செய்யாமல் விஜய் டிவியும் வெளியிட்டதால் கண்டனங்கள் எழுந்தன.
நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நேற்று இரவு செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது தமிழக அரசின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்த அவர், அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக கமல் கூறினார்.
சிஸ்டம் சரியில்லை என்று தான் ஒரு வருடத்திற்கு முன்பே தெரிவித்ததாகவும், அதனை தற்போது ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வழிமொழிகிறார்கள் என்றும் கூறினார். கமலின் இந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தான் நடத்தும் ஒரு நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக தமிழக அரசின் மீது சேற்றை வாரி வீசுவதா? சிஸ்டம் சரியில்லை என்பதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டமே சரியில்லை என கமல் சொல்ல வருகிறாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.