கட்டுமான நிறுவனம் தொடங்க முதலீடு எங்கிருந்து வந்தது? விஜயபாஸ்கர் மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை
அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணிநேரமாக விசாரணை நடத்தினர்.அப்போது கட்டுமான நிறுவனம் தொடங்க முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது? என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் பறி்முதல் செய்யப்பட்ட ரூ.89 கோடிக்கான ஆவணங்கள் தொடர்பாக சம்மன் அனுப்பிய நிலையில் அவரது மனைவி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 8 மணிநேரமாக விசாரணை நடைபெற்றது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளில் ஏப்.7,8 ஆகிய தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது விஜயபாஸ்கரின் வீட்டில் ரூ.89 கோடிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து மேற்கண்ட மூவருக்கும் வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பினர். அதன் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விஜயபாஸ்கரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.89 கோடி ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த அவரது மனைவி ரம்யாவை நேற்று மாலை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். எனினும் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் அவர் திடீரென ஆஜரானார். அவரிடம் சுமார் 8 மணிநேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது கட்டுமான நிறுவனம் தொடங்க முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.