கமலுக்கு கண்ணியத்தோடு பதில் சொல்லியிருக்க வேண்டும்: ஒதுக்கிய அமைச்சர்களுக்கு டிடிவி அறிவுரை!
நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கண்ணியத்தோடு பதில் சொல்லியிருக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கண்ணியத்தோடு பதில் சொல்லியிருக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்தும் அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில் குறித்தும் கேள்விகள் எழுப்பட்டன.
அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகர் என்றார். பிரபலமான அவர் அரசாங்கத்தை பற்றி கருத்து கூறியிருக்கிறார். அதற்கு அவருக்கு சுதந்திரமும், உரிமையும் இருக்கிறது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதேநேரத்தில் அவர் காழ்ப்புணர்ச்சியோடு சொல்லி இருக்கிறாரோ, சுய விருப்பு, வெறுப்போடு சொல்லியிருக்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல், பொதுவாக எல்லா துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது என்று தொனியில் கூறியிருக்கிறார். அதனை தகுந்த ஆதாரங்களுடன் கமல் சொல்லி இருக்கலாம் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
மேலும் அவரை எதிர்கொள்ள வேண்டிய அமைச்சர்கள் ஒருமையில் பதில் கூறாமல், கண்ணியத்தோடு விமர்சனங்களை தகுந்த முறைப்படி அணுகியிருக்கவேண்டும் என அறிவுறுத்தினார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கற்று தந்த பாதையிலே கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை காத்து பதில் சொல்லி இருந்தால், இதுபோன்ற நிகழ்வு வந்திருக்காது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.