கொசு மருந்திலும் கலப்படம்... டெங்கு பலி அதிகரிக்க அதுவே காரணம்... போட்டுத் தாக்கும் ஸ்டாலின்
தரமில்லாத கொசு மருந்தை அடித்ததாலேயே டெங்கு காய்ச்சல் மரணம் அதிகரித்ததாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: தரமில்லாத கொசு மருந்துகளை அடித்து கொசு மருந்திலும் ஊழல் செய்ததால்தான் டெங்கு காய்ச்சல் மரணம் அதிகரித்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜக ஆட்சியைப் பொறுத்தவரை எதிர்கட்சிகள் மீது ஏதேனும் குற்றச்சாட்டு வந்தால், அது உண்மையோ அல்லது உண்மைக்கு புறம்பானதோ, உடனடியாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் நடந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும்.
அதுபோல், பாஜக தலைவர் அமித்ஷா மகன் மீது பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அமித்ஷா குடும்பத்தினர் அதிக பயனடைந்து இருப்பதாக குற்றச்சாட்டு இப்பொழுது வந்திருக்கிற நேரத்தில், அதுபோன்ற சோதனைகள் நடைபெறுமா என்பதுதான் என் கேள்வி. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பது போல், பிரதமராக இருக்கும் மோடி அதனை நிரூபிக்கிற வகையில் உரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
குட்கா ஊழல்
டெங்கு பிரச்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் அவர்களுடைய அக்கறை எல்லாம் ஏற்கெனவே ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா விவகாரத்தில் வருமான வரித்துறையிடம் இருந்து எப்படி தப்பித்துக் கொள்வது, குட்கா ஊழலில் புகாரில் இருந்து எப்படி தப்பித்துக் கொள்வது, என்பதில்தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கருணாநிதி பெயர் கல்வெட்டில்...
சிவாஜிகணேசன் மணிமண்டபத்தின் கல்வெட்டில் கருணாநிதி பெயர் இடம் பெறுவதற்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளது கண்டனத்துக்குரியது. இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், அரசியல் நாகரிகத்தை இவர்களிடத்தில் எந்த காலத்திலும் எதிர்ப்பார்க்க முடியாது.
டெங்கு பாதிப்பு அதிகம்
டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தேவையில்லாதது என நான் சொன்னால் ஏதோ அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சொல்கிறேன் என்பார்கள். அதில் காட்டும் அக்கறையை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளிலும் காட்ட வேண்டும்.
கொசு மருந்து அடிப்பதில் ஊழல்
கொசு மருந்து அடிப்பதில் கூட ஊழல் செய்திருக்கிறார்கள். ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். இதுதொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார் ஸ்டாலின்.