காவிரி வாரியத்திற்காக கடலில் இறங்கும் போராட்டம்... திருவொற்றியூரில் மஜக நூதன எதிர்ப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியினர் கடல் மார்க்கமாக சென்று துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூரில் இருந்து கடல் வழியாக துறைமுகத்தை அடைந்து முற்றுகையிடும் நூதன போராட்டத்தை அறிவித்திருந்ததால் முன்எச்சரிக்கையாக போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் 50க்கும் மேற்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடலில் இறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒண்டிக்குப்பம் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக துறைமுகத்தை அடைந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.

கடலில் இறங்கும் போராட்டத்தை தடுக்கும் விதமாக அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும், மத்திய அரசு பாகுபாடு காட்டக் கூடாது என்பன உள்ளிட்ட மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் இனியும் மத்திய அரசு அலட்சியம் காட்டினால் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications