என்னா உற்சாகம்.. என்னா சந்தோஷம்.. இப்போதைக்கு தமிழகத்திலேயே மகிழ்ச்சியான தலைவர்கள் இவர்கள்தான்!
தஞ்சாவூர்: முடியாது என்பதை சாதித்து காட்டுபவன் தான் சாதனையாளன். நாங்கள் சாதனையாளர்கள். வெற்றி பெறுவோம் என்ற உறுதியோடு தான் தேர்தல் களத்திற்கு வந்து இருக்கிறோம். எவ்வளவு பெரிய படை வந்தால் என்ன? மக்கள் சக்தி நம் பக்கம் திரளும். நாம் தயாராகிவிட்டோம். எங்களை அழிக்க நினைத்த எதிரிகளின் கூடாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நீதிமன்றங்களில் வாதாடுவதை போல் நீதிகேட்டு மக்கள் முன் வந்து வாதாடுகிறேன். மக்களிடம் நீதி கேட்டு வந்து இருக்கும் எங்களுக்கு நீங்கள்(மக்கள்) தீர்ப்பு வழங்க வேண்டும். நீங்கள் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சியினர் விருப்ப மனு, வேட்பாளர் நேர்காணல் என பிசியாக இருக்க மக்கள் நலக்கூட்டணி தலைவர்களோ தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டனர். செல்ஃபி எடுத்து போடுவதாகவும், ஒரே மாலையை நான்கு பேரும் அணிந்து கொள்வதாகட்டும், வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் படு சுறுசுறுப்பாகவே மக்களை சந்தித்து வருகின்றனர்.
மதுரையில் மாஸ் காட்டிய மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் புதுச்சேரியிலும் அதே போன்றதொரு கூட்டத்தில் பேசினர். கடலூரில் கடந்த 7ம் தேதி தொடங்கிய பிரச்சாரக் கூட்டம், திருவாரூர், தஞ்சாவூர் என விடிய விடிய மக்களைச் சந்தித்து பேசி வருகின்றனர்.
சாதனையாளன் யார்?
தஞ்சை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழகத்தில் 65 சதவீதம் பேர் எந்த கட்சியையும் சாராத நடுநிலையாளர்களாக உள்ளனர். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி நல்ல முடிவு எடுங்கள். இது தான் சரியான நேரம். முடியாது என்பதை சாதித்து காட்டுபவன் தான் சாதனையாளன். நாங்கள் சாதனையாளர்கள் என்றார்.
எதிரிகளின் கூடாரத்தில் கலக்கம்
வெற்றி பெறுவோம் என்ற உறுதியோடு தான் தேர்தல் களத்திற்கு வந்து இருக்கிறோம். எவ்வளவு பெரிய படை வந்தால் என்ன? மக்கள் சக்தி நம் பக்கம் திரளும். நாம் தயாராகிவிட்டோம். எங்களை அழிக்க நினைத்த எதிரிகளின் கூடாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆட்சி அமைப்போம்
மீத்தேன் திட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது துணை முதல்அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தான் கையெழுத்து போட்டார். மதுவை ஒழிக்க 2,500 கிலோமீட்டர் தூரம் தமிழ் நாட்டின் வீதி, வீதியாக சென்று லட்சக்கணக்கான மக்களை சந்தித்தேன். மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நேர்மையான ஆட்சியை தருவோம். மதுவிலக்கை அமல்படுத்துவோம். தமிழ் மண்ணில் நல்லாட்சி மலரட்டும். தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.
திருமாவளன் பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது உரையில், நாட்டை காக்க, இந்த மண்ணை காக்க, நாங்கள் மாற்றுவழியை உருவாக்கி இருக்கிறோம். தமிழகத்தில் இன்னும் சிலர் கூட்டணிக்காக காத்து இருக்கிறார்கள். சிலர் எங்கு சேரலாம் என்று ஊசலாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றார். ஆனால் நாம் மக்களை நோக்கி புறப்பட்டு இருக்கிறோம் என்றும் கூறினார்.
கூட்டணிக்கு வருபவர்கள் வரலாம்
தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய கூட்டம் இது. இந்த கூட்டணி தேர்தல் அறிவித்துவிட்டால் சிதறிவிடும் என்று சிலர் எண்ணினார்கள். ஊழலை ஒழிக்க, சமூகநீதியை பாதுகாக்க, டெல்டா விவசாயத்தை காக்க விரும்புகின்றவர்கள் மக்கள் நலக்கூட்டணிக்கு வரலாம். ஆனால் காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு இடம் இல்லை.
ஆட்சி மாற்றம்
தமிழகத்தில் 1967ம் ஆண்டு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அண்ணா முதல்-அமைச்சர் ஆனார். காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அன்று வீழ்ந்தவர்கள் இன்றைக்கும் எழுந்திருக்க முடியவில்லை. 1967ம் ஆண்டு எப்படிப்பட்ட மனநிலை மக்களிடம் இருந்ததோ, அதே மனநிலை இன்றைக்கு உள்ளது. அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை போல் இந்த தேர்தலில் ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியலை முன் வைத்து இருக்கிறோம். மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என்ற கனவு பலிக்காது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற கொள்கையோடு செயல்பட வேண்டும் என்றார் திருமாவளவன்.
மது விலக்கு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தனது உரையில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. மதுவினால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு தமிழகம் சீரழிந்துவிட்டது. மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.
ஊழல் இல்லாத ஆட்சி
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் மதுவிலக்கை விலக்கியது யார்? தி.மு.க. ஆட்சியில் தான் மதுவிலக்கு விலக்கி கொள்ளப்பட்டது. அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினால் மக்களிடம் மாற்றம் ஏற்படும். கொள்கை ரீதியான மாற்றத்தை மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே முடியும். தமிழகத்தில் ஊழல் இல்லாத, கரைபடியாத நல்லாட்சி மலர வேண்டும் என்று கூறினார்.
திமுக, அதிமுக ஒன்றுதான்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசும் போது, மக்கள் நலக்கூட்டணியை தமிழக மக்கள் ஆதரிக்க தொடங்கிவிட்டனர். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றார். அண்ணா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றது. ஆனால் மக்கள் பிரச்சனை தீர்க்கப்பட்டு இருக்கிறதா? இல்லை. விவசாயிகளை பாதுகாக்க, விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க ஆளும் கட்சியும், ஏற்கனவே ஆண்ட கட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பணத்தை பறிமுதல் செய்வோம்
டெல்டா மாவட்டங்களில் தீண்டாமை கொடுமையின் முதுகெலும்பை ஒடித்த பெருமை செங்கொடியை சாரும். மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கல்வி வியாபாரமாக்கப்படுவது தடுக்கப்படும். அரசு பள்ளிகளை பாதுகாப்போம். வளமான, ஊழலற்ற, வகுப்புவாதம் இல்லாத, சாதி மோதல் இல்லாத தமிழகம் உருவாக மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தால் அந்த பணத்தை பறிமுதல் செய்வோம் என்றார்.
பகலில் தொடங்கிய பிரச்சாரம் விடிய விடிய நீடித்தாலும் கூடும் கூட்டத்தைப் பார்த்து உற்சாகமாக பேசி வருகின்றனர் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள்.