ஓகி புயல் பாதித்த இடங்களில் நாளை ஆய்வு.. தோளுடன் தோள் கொடுப்போம் என டுவிட்டரில் மோடி உறுதி
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நாளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொள்ள நாளை தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி தான் கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து புறப்பட்டது குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கடந்த 30-ஆம் தேதி வங்க கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகம், கேரளம், லட்சத்தீவு ஆகிய பகுதிகளை பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு சென்றது. இந்த புயல் கரையை கடந்து 15 நாள்களுக்கு மேலாகியும் அது ஏற்படுத்தி விட்டு சென்ற பாதிப்புகள் ஏராளமாக உள்ளன.
இடுப்பளவு நீர், மின்சாரம் துண்டிப்பு, பயிர் சேதம் என தென் தமிழகத்துக்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புயல் உருவானது தெரியாமல் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை.
அவர்களை மீட்கக் கோரி உறவினர்களும் சக மீனவர்களும் போராடி ஓய்ந்த நிலையில் தற்போது சின்னத்துறையில் கரையில் காத்திருக்கின்றனர். ஓகி புயல் பாதித்த இடங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிடுகிறார்.
Since #CycloneOckhi struck, Centre has been monitoring the situation round the clock and ensuring proper rescue and relief operations. We have been working closely with the Governments of the affected states. We stand shoulder to shoulder with all those affected by the cyclone.
— Narendra Modi (@narendramodi) December 18, 2017
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஓகி புயல் தாக்கியதிலிருந்து 24 மணிநேரமும் மத்திய அரசு நிலைமையை கண்காணித்து வருகிறது. முறையான மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதையும் உறுதி செய்து வருகிறோம்.
புயல் பாதித்த மாநிலங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அந்த மாநிலங்களுக்கு தோளோடு தோள் கொடுப்போம். லட்சத்தீவு, தமிழகம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட நாளை வருகை தரவுள்ளேன். அதற்காக மங்களூரிலிருந்து புறப்பட்டு விட்டேன்.
Leaving for Mangaluru, Karnataka. Tomorrow, I will visit Lakshadweep, Tamil Nadu, and Kerala and extensively review the situation that has arisen due to #CycloneOckhi. I will meet cyclone victims, fishermen, farmers, officials and public representatives. https://t.co/XaANfnWrr4
— Narendra Modi (@narendramodi) December 18, 2017
புயலால் பாதிக்கப்பட்டவர்கள், மீனவர்கள், விவசாயிகள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளேன் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.