இலங்கையின் புதிய சட்டம் தப்பானது.. திரும்பப் பெற மோடியிடம் அழுத்தம் கொடுப்போம்: நவநீதகிருஷ்ணன் உறுதி
இலங்கை அரசு மீனவர்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள புதிய சட்டம் தவறானது. இதனை திரும்பப் பெற பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம் என்று எம்பி நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் எம்பி நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் எம்பிக்களிடம் வலியுறுத்தினார். மக்களின் நலனை கட்டிக் காக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார்.
அதே போன்று ஜனாதிபதி தேர்தலில் முறையாக வாக்களிக்க வேண்டும் என்றும் எம்பிக்களான எங்களிடம் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
நீட் தேர்வு
நீட் தேர்வை பொறுத்தவரை சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். முதல்வரும், நல்வாழ்வுத் துறை அமைச்சரும் தொடர்ந்து மத்திய அரசிடம் இதுதொடர்பான அழுத்தங்களை கொடுத்து வருகிறார்கள். நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
கதிராமங்கலம் போராட்டம்
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி புதியதாக குழாயை பதிக்கவில்லை. பழைய குழாயை அவர்கள் மாற்றி வருகிறார்கள். இது புதிய பிரச்சனை இல்லை.
நீதிபதிக்கான தேர்வு
மாவட்ட நீதிபதிகளுக்கு இந்திய அளவில் தேர்வு வைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பேசப்பட்டது. அதையொட்டி மத்திய அரசு, இந்திய அளவில் தேர்வு என்ற முடிவை எடுத்துள்ளது. அதிலும், கீழமை நீதிமன்றங்களில் உள்ள ஜுடிஷியல் நீதிபதிகளுக்கு இது பொருந்தாது. அதற்கு மேல் உள்ள நீதிபதிகள் தான் தேர்வு எழுத வேண்டும்.
மீனவர் பிரச்சனை
இலங்கை அரசு கொண்டு வந்துள்ள அபராதம் சட்டம் மிகத் தவறானது. தமிழக அரசு அதனை எதிர்க்கிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் அதிமுக எம்பிக்கள் சுட்டிக் காட்டுவோம். இந்த விஷயத்தில் தலையிட பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம்.