தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்ற நளினி வேலூர் சிறைக்கு திரும்பினார்
வேலூர்: சென்னையில் தந்தையின் ஈமச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் நளினி வேலூர் சிறைக்கு மீண்டும் திரும்பினார்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி. இவரது தந்தை சங்கரநாராயணன் கடந்த மாதம் 23-ந்தேதி இறந்தார். இவரது இறுதிச்சடங்கு சென்னையில் நடந்தது.
அதில் கலந்துகொள்ள நளினிக்கு 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டது. இதன் பின்னர் 16-ம் நாள் ஈமசடங்குக்காக 3 நாள் பரோல் கோரியிருந்தார் நளினி. இதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரோல் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி மாலா, நளினிக்கு 24 மணிநேர பரோல் வழங்கி உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சென்னை வந்தார் நளினி. இன்று தந்தை சங்கரநாராயணின் ஈமச்சடங்கில் அவர் கலந்து கொண்டார். பின்னர் மாலை 4 மணியளவில் வேலூர் சிறைக்கு நளினி திரும்பினார்.