பாஜக நீட்டும் குச்சிக்கு பல்டி அடிக்கும் வருமான வரித்துறை - நமது எம்ஜிஆர் சாடல்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை பாஜக நீட்டும் குச்சிக்கு பல்டி அடிக்கிறது என்று நமது எம்ஜிஆர் நாளேடு குறிப்பிட்டுள்ளது.
சென்னை: தர்மத்தின் பிரகாரம் நடக்க வேண்டிய வருமான வரித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் பாஜகவினர் நீட்டுகிற குச்சிக்கு பல்டி அடிப்பதை கடமையாக கொண்டுள்ளது என்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் குறிப்பிட்டுள்ளது.
சாமானியன் என்ற பெயரில் வெளியிட்டுள்ள செய்தியில், வருமானவரித்துறை பெண் அதிகாரி ஒருவர், தம்மை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தமிழக அமைச்சர்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.
ஏழாம் தேதி நடைபெற்ற வருமானவரி சோதனைக்கு 12ஆம் தேதி புகார் அளித்திருக்கிறார். எப்படி இட்டுக் கட்டி புகார் அளிப்பது என்கிற உத்தரவு மேலிடத்திலிருந்து வருவதற்காக ஐந்து நாள் காத்திருந்தாரா என நமது எம்ஜிஆர் கேள்வி எழுப்பியுள்ளது.
திட்டமிட்டு நாடகம் நடத்தி ரத்து செய்திருக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை, தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையமே, மத்திய அரசுடன் கலந்துபேசி ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கிறது.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித்துறை, பாரதிய ஜனதாவினர் நீட்டுகிற குச்சிக்கு, பல்டி அடிப்பதுதானே கடமையாக இருக்க முடியும் என நமது எம்ஜிஆர் விமர்சித்துள்ளது.
எப்படியோ நீதித்துறை, ஆளுநர், ஆணையம், ஊடகம், வருமான வரித்துறை என ஜனநாயகத்தின் மாண்புமிக்க தூண்களை எல்லாம் தங்களின் அரசியலுக்கான ஏணி
என கருதுகிறது காவிக் கட்சி என்றால், அது காந்தி தேசத்திற்கு போதாத காலம்தானே என்றும் நமது எம்ஜிஆர் கூறியுள்ளது.