நாங்க ரெடி.. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய ரெடியா? நத்தம் விஸ்வநாதன் சவால்
ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேரும் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளோம். இந்த சவாலுக்கு ரெடியா என்று கேள்வி எழுப்பினார் நத்தம் விஸ்வநாதன்.
சென்னை: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயாரா என்று முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன் சவால் விடுத்தார்.
திண்டுக்கல் நகரில் இன்று, அதிமுக (பன்னீர்செல்வம் தரப்பு), செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் பின்னால் இருப்பதுதான் உண்மையான அதிமுக என்றார்.
சில பதவிகளுக்காக அதிமுகவில் சில சட்டசபை உறுப்பினர்கள் சசிகலா தரப்புடன் இருப்பதாகவும் நத்தம் தெரிவித்தார்.

பன்னீர் பக்கம் மக்கள்
பெருவாரியான மக்கள் பன்னீர்செல்வம் பக்கம்தான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது யாருமே அவரை பார்க்க முடியவில்லை. அதற்கு சசிகலா தரப்பு அனுமதி வழங்கவில்லை. உண்மையான அதிமுக யார் என்பதை தெரிந்து கொள்ள, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய சசிகலா ஆதரவு 122 எம்.எல்.ஏக்களும் தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ராஜினாமாவுக்கு ரெடி
ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேரும் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளோம். இந்த சவாலுக்கு ரெடியா என்று கேள்வி எழுப்பினார் நத்தம் விஸ்வநாதன்.

அஞ்சா நெஞ்சங்கள்
இந்த கூட்டத்திற்கு வந்திருப்போரெல்லாம், ஆளும்கட்சிக்கு அஞ்சாமல் இயக்கத்தை மீட்டெடுக்க வந்த தியாக செம்மல்கள்தான். அரசு ஊழியர்கள்,அரசு சங்கங்கள் என ஒட்டுமொத்த மாநிலமும் ஓ.பி.எஸ்-யை ஆதரிக்கிறார்கள்.

மன்னார்குடி மாபியா
இப்போது நடக்கும் ஆட்சி மன்னார்குடி மாபியா குடும்ப ஆட்சி. தமிழகத்தில் 99% பெண்கள் சசிகலாவை எதிர்த்து வருகின்றனர். இந்த ஆட்சியை நீக்கிவிட்டு உண்மையான கழக ஆட்சியை அமைக்க பாடுபட வேண்டும். இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் பேசினார்.












Click it and Unblock the Notifications