68வது சுதந்திரத் தினவிழா... கோவையில் கொடி கட்டிப் பறக்கும் ‘தேசியக் கொடித் தயாரிப்பு’
சென்னை: வரும் வெள்ளியன்று 68வது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேசியக் கொடித் தயாரிப்பு வேலைகள் கோவையில் படுமும்முரமாக நடக்கிறது.
கடந்தாண்டு சுதந்திரத் தினத்திற்கென சுமார் இரண்டு லட்சம் காட்டன் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டன. தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தாண்டு சுமார் மூன்று லட்சம் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த தயாரிப்பு வேலைகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் கொடிக்குத் தடை...
சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கருத்தில் கொண்டு இந்தாண்டு பிளாஸ்டிக் கொடிகள் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. எனவே, துணியால் தயாரிக்கப் படும் கொடிகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தினந்தோறும் 5000 கொடிகள்...
கோவையில் நாள்தோறும் சுமார் 5000 தேசியக் கொடிகள் தயாரிக்கப் படுவதாக கொடித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக இரவும், பகலும் அயராது அவர்கள் உழைத்து வருகின்றனராம்.
ஏற்றுமதி...
இங்கு தயாராகும் தேசியக் கொடிகள் தான் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப் பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமாதிரிகள்...
இதுபோக இந்தாண்டு பேட்ஜ், பேண்ட், பலூன்கள் மற்றும் மோதிரங்கள் என இளைஞர்களைக் கவரும் வகையிலும் புது மாதிரியாக கொடிகள் தயாரிக்கப் பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.