வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மேலும் 2 போர்க்கப்பல்கள் - நிவாரண பொருட்களுடன் சென்னை வந்தன
சென்னை: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சக்தி, ஐ.என்.எஸ். சாயத்ரி ஆகிய மேலும் 2 போர்க்கப்பல்கள் 100 டன் நிவாரணப் பொருட்களுடன் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன. ஐ.என்.எஸ். ஐராவத் என்ற கப்பல் வியாழக்கிழமையன்று 20 டன் நிவாரண பொருட்களுடன் சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில் மேலும் இரண்டு போர்கப்பல்கள் சென்னைக்கு வந்துள்ளன.
கடந்த சில தினங்களாக பெய்தி வரும் தொடர்மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. புறகரில் உள்ள பல குடியிருப்பு பகுதிகள் தீவுகளாக காட்சி அளிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர், மாநில மீட்புப்படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் அவர்கள், உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றையும் வழங்கி வருகிறார்கள். சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவ தளபதி தல்பீர் சிங் நேற்று விமானத்தில் சென்று பார்வையிட்டார்.
போர்க்கப்பலில் நிவாரண பொருட்கள்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஐராவத் என்ற கப்பல் நேற்று முன்தினம் 20 டன் நிவாரண பொருட்களுடன் சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. அதைத்தொடர்ந்து ஐ.என்.எஸ். சக்தி, ஐ.என்.எஸ். சாயத்ரி ஆகிய மேலும் 2 போர்க்கப்பல்கள் 100 டன் நிவாரணப் பொருட்களுடன் சென்னை துறைமுகத்துக்கு வியாழக்கிழமை வந்து சேர்ந்தன.
100 டன் நிவாரண பொருட்கள்
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சக்தி, ஐ.என்.எஸ். சாயத்ரி ஆகிய மேலும் 2 போர்க்கப்பல்கள் 100 டன் நிவாரணப் பொருட்களுடன் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன. இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 100 டன் நிவாரணப் பொருட்கள் உள்ளன. 5 லட்சம் லிட்டர் குடிநீர் உள்ளது. அதுதவிர 400 தண்ணீர் கேன்களும் உள்ளன. அரிசி, கோதுமை, மைதா போன்ற 30 டன் உணவுப் பொருட்கள் மற்றும் பழச்சாறு, பிரெட் ஆகியவை கொண்டு வரப்பட்டு உள்ளதாக இந்திய கடற்படையின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான அதிகாரி அலோக் பட்நாகர் கூறியுள்ளார்.
80 நீச்சல் வீரர்கள் வருகை
மக்களை மீட்பதற்காக ஒரு சேதக் ரக ஹெலிகாப்டரையும் கொண்டு வந்து உள்ளோம். அதுதவிர 15 எந்திரம் பொருத்தப்பட்ட ரப்பர் படகுகளை எடுத்து வந்து இருக்கிறோம். 80 நீச்சல் வீரர்களும் வந்து உள்ளனர். ஒரு படகு மூலம் 8 பேரை காப்பாற்ற முடியும்.
2 கப்பல்களிலும் 300 சிப்பந்திகள் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். 4 ஜெனரேட்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மருத்துவ உதவிகள்
1,000 போர்வைகள், 2 ஆயிரம் டவல்கள், 2 ஆயிரம் பேருக்கு கொடுக்கும் அளவுக்கு மருந்துகள் இந்த கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளன. அதோடு 3 டாக்டர்கள், ஒரு பல் மருத்துவர், 7 மருத்துவ உதவியாளர்கள் வந்து உள்ளனர்.
மாநில அரசுக்கு ஒத்துழைப்பு
அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோரை கப்பலுக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முடியும். மேலும், ஆயிரம் லிட்டர் பெட்ரோலையும் கொண்டு வந்து உள்ளோம். டீசலையும் எங்களால் வழங்க முடியும். தமிழக அரசு கேட்ட உதவிகளைச் செய்து உள்ளோம். மாநில அரசுக்கு ஒத்துழைத்து வருகிறோம். மேலும் உதவி கேட்டாலும் எங்களால் வழங்க முடியும். இந்த இயற்கை பேரிடர் மேலும் தொடரும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதுவரை எங்களின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தொடரும் என்றும் அலோக் பட்நாகர் தெரிவித்துள்ளார்.
கடலூரில் மீட்பு
கடலூரில் நிவாரண பணிகள் குறித்து எந்த கோரிக்கையும் வரவில்லை. கேட்டால் அங்கும் சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை தொடருவோம். புதுச்சேரி தலைமைச் செயலாளருடன் பேசினோம். புதுச்சேரியில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை என்பதாலும், வெள்ளம் அங்கு வடியத் தொடங்கிவிட்டதாலும் எங்கள் உதவியை அவர்கள் கோரவில்லை என்றும் அலோக் பட்நாயக் கூறினார்.
உதவி எண்கள்
இதனிடையே மீட்புப்பணிக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படை டெல்லியில் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை அமைத்து இருப்பதாகவும் அவசர உதவிக்கு 011-24363260, 09711077372 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.