ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு.. 3வது நாளாக தீவிரமடைகிறது நெடுவாசல் போராட்டம்
மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசலில் செயல்படுத்தப்படுகிறது. இதனை எதிர்த்து நெடுவாசலில் தொடங்கிய போராட்டம் 3வது நாளாக தீவிரமடைந்துள்ளது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் புதன் கிழமை அன்று குதித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கக் கூடாது என்று கோரி 22 நாட்களாக நெடுவாசலில் ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கொடுத்த வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கடந்த 27ம் தேதி தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடங்கியது...
இதனைக் கண்டித்தும், ஹைட்ரோ கார்பனை எதிர்த்தும் நெடுவாசலில் புதன் கிழமை காலை இளைஞர்களும், பெண்களும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போலீசார் எவ்வளவோ தடுத்தும் மீறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
3வது நாள்
புதன் கிழமை தொடங்கிய இந்தப் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் மற்றும் 70 கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் என ஒவ்வொன்றாக தொடர உள்ளனர் நெடுவாசல் கிராம மக்கள்.
ஆதரவு
நெடுவாசலில் தொடங்கியுள்ள இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றும் அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் அமைப்புகள் என அனைத்து தரப்பில் இருந்து ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.
பதற்றம்
தொடர்ந்து 3 நாட்களாக போராட்டம் நடைபெற்ற வருவதால் புதுக்கோட்டை நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.