திணிக்கப்படும் நீட் தேர்வு... பகல் கனவாகும் மருத்துவர் ஆசை... 8 லட்சம் மாணவர்கள் பாதிப்பு
தமிழக மாணவர்கள் மீது நீட் தேர்வை மத்திய அரசு திணிப்பதால், ஏழை, நடுத்தர மாணவர்களின் மருத்துவர் கனவு பகல் கனவாகிவிடும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை: தேசிய தகுதி காண் தேர்வு எனப்படும் நீட் தேர்வை மத்திய அரசு, மாநிலங்களின் மீது திணிப்பதால் தமிழகத்தைச் சேர்ந்த 8 லட்சம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவர் கனவு பகல் கனவாகிவிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 'நீட்' தேர்வுக்காக மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் இன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் தமிழக முதல்வர் பிரதமர் மோடியை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்படுகிற நுழைவுத் தேர்வால் சாதாரண, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவு பலிக்காத நிலை ஏற்படும். இதை கையாள தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையெனில் கடந்த ஆண்டு நிறைவேற்றியதைப் போல இன்னும் 2 ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் மத்திய அரசு அவசரச்சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு எந்த நிலைப்பாட்டை செயல்படுத்தாமல் இருந்தால் தமிழகத்தில் உள்ள 8 லட்சம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு நிறைவேற்றுகிற திட்டங்களை எல்லாம் மாநில அரசுகள் தலையாட்டிக் கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசு நினைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தில் கல்வித்தரம் கடந்த பல ஆண்டுகளாக சீரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது குறித்து யாரும் கவலைப்படாமல் இருக்கமுடியாது.
இனி வரும் காலங்களில் நீட் தேர்வை எதிர்கொள்ள மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத்திட்டத்தை தரமாக மாற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.