புரட்சி நாயகன் நேதாஜி... சில நினைவுகள்
சென்னை: "எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்" என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடு இணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது.
சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் நேதாஜியின் அபூர்வ புகைப்படங்களை வெளியிட்டு அந்த வீரத்தலைவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
118 வது பிறந்தநாள்
நேதாஜியின் 118வது பிறந்தநாள் விழா ஜனவரி 26ம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்டது. மகாத்மா காந்திக்கு நிகரான தலைவராக அவர் இந்திய சுதந்திரத்திற்காக பாடு பட்டிருந்தாலும் நேதாஜியின் பிறந்தநாள் எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஒரு சாதாரண நாளாக கடந்து போய்விட்டது.
அத்வானி மட்டுமே…
டெல்லியில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் லோக்சபா, ராஜ்யசபாவின் 775 எம்.பி.க்களில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மட்டும் பங்கேற்றார்.
சென்னையில் அமைச்சர்கள்
நேதாஜியின் பிறந்தநாளன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நேதாஜியின் சிலை மற்றும் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, மாதவரம் மூர்த்தி, ரமணா, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
9 வது மகன் நேதாஜி
1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
ஆசிரியருடன் தகராறு
நேதாஜி சுபாஷ் சந்திர சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தவர். 1915 ஆம் ஆண்டு "கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்ன ஆசிரியருடன் தகராறு செய்து அதனால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
லண்டனில் ஐ.சி.எஸ்
"ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்" சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார்.
திருப்புமுனை தந்த ஜாலியன் வாலாபாக்
1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்தான் சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட காரணமாக அமைந்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. உடனடியாக லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வந்தார் சுபாஸ் சந்திர போஸ்.
‘நேதாஜி’ பட்டம்
1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட சுபாஷ், "நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை" என முழங்கினார். சுபாஷ் காங்கிரஸ் தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி' (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார்.
காதல் மனைவி
நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரை டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.
காந்தியும் நேதாஜியும்
1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினார். காந்தியின் வேட்பாளர் தோல்வியடைவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.
நேதாஜியின் போராட்டம்
1941 ஆம் ஆண்டு "சுதந்திர இந்திய மையம்" என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார்.
நீடிக்கும் மர்மம்
ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.
இளைஞர்கள் மனதில்…
தன் உயிரையே பணயம் வைத்து ஜெர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் நேதாஜியை இன்றைய அரசியல் தலைவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் புரட்சியை நேசிக்கும் இளைஞர்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.