குடிகார கணவனால் மனம் உடைந்து தீக்குளித்த 8 மாத புதுப்பெண்
உடுமலை: கணவர் குடியை நிறுத்தாததால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உடுமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உடுமலை போடிபட்டி காமராஜ் நகரில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். கேரளாவை சேர்ந்த இவர் உடுமலையில் கோழிகளுக்கு ஊசிபோடும் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் உடுமலையை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 8 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் ராதா கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது தெரிந்து மனைவி அதிர்ச்சியடைந்தார். இனிமேல் குடிக்ககூடாது என்று எச்சரித்தார். எனினும் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மனம் உடைந்த சாந்தி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். குடிப்பதை நிறுத்தவில்லை என்றால் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறினார்.
இனி குடிக்க மாட்டேன் என்று ராதாகிருஷ்ணன் கூறினார். கடந்த 8 ஆம் தேதி மீண்டும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அதிர்ச்சியும், வெறுப்பும் அடைந்த சாந்தி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தீக்குளித்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாந்தி சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உடுமலை இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. குணசேகரனும் விசாரித்து வருகிறார்.