பொதுமக்களுகோர் அறிவிப்பு: இனி, கமிஷனர் அலுவலகத்தில் யாரும் புகார் கொடுக்க கூடாது
சென்னை: அதிக மக்கள் கூடுவதால், வேப்பேரி பகுதியில் ஏற்படும் வாகனநெரிசலைக் கருத்தில் கொண்டு, இனி காவல் நிலையங்களில் அளிக்கும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மட்டுமே கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க வரலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதுவரை வார நாட்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொது மக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு வந்தன. இந்தப் புகார் மையத்தில் அளிக்கப் படும் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக மக்கள் கருதுவதால், தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு கூடுகின்றனர்.
இதனால், கமிஷ்னர் அலுவலக வளாகத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். இந்நிலையில், தற்போது புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் வேப்பேரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கும் மக்கள் புகார் கொடுக்க வருவதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், புகார் கொடுக்க வருபவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வருவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் புதிய நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், பொது மக்களிடமிருந்து இனி கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக புகார்கள் பெறப்பட மாட்டாது தெரிவிக்கப் பட்டுள்ளது.
முதலில், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட வேண்டும். அங்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் உதவி கமிஷனர் அல்லது துணை கமிஷனர் அல்லது இணை கமிஷனர் ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுக்கலாம். அதன் பிறகும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மட்டுமே கமிஷனர் அலுவலகத்தை நாடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.