அட.. நீட் விலக்கு இல்லை என்பதில்தான் இந்த ராஜாவுக்கு எம்புட்டு சந்தோஷம் பாருங்களேன்!
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடையாது என்ற முடிவிற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தர்மம் வென்றதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து கூறியுள்ளார்.
பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இருக்கக் கூடாது என மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்தது. இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, தமிழக அரசு ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசரச் சட்ட வரைவை இயற்றி அதனை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியது. இதற்குச் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
அட்டார்னி ஜெனரல் கருத்து
ஆனால் சுகாதாரத் துறை, இதுகுறித்த கருத்தை அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலிடம் கேட்டது. அதற்கு அவர் நீட் தேர்விற்கு விலக்கு அளித்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று கூறினார்.
கைவிரிப்பு
இதனால், மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பதற்கு எதிரான முடிவை எடுக்கும் என்ற நிலை உருவானது. அதே போன்று, உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நீட் தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழக அரசின் ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை மத்திய அரசு கூறிவிட்டது.
எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த முடிவிற்குத் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
எச். ராஜா வரவேற்பு
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவிற்கு, பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் தர்மம் வென்றதாகக் கூறிய அவர், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.