8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி ரத்து.. மாணவர் முதுகில் குத்துகிறார் மோடி… வேல்முருகன் கண்டனம்
எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி ரத்து என்று மாணவர் முதுகில் மோடி குத்துகிறார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்து மோடி மாணவர்களின் முதுகில் குத்தியுள்ளார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இது கம்ப்யூட்டர் காலம். டிஜிட்டல் யுகம். ஆனால் மோடி நம்மைக் கற்காலத்திற்கே பின்னோக்கித் தள்ளப் பார்க்கிறார்.
மோடிக்கு மட்டும் டிஜிட்டல்
இத்தனைக்கும் டிஜிட்டல் என்று பேசிக் கொண்டிருக்கும் மோடிக்கு ஏன் இந்தப் பிற்போக்கு எண்ணம் என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? அது, எல்லோரும் கற்றுவிட்டால் மோடி மாத்திரம் டிஜிட்டல் என்று பேசிக் கொண்டிருக்க முடியாது தானே?
பெரும்பான்மை மக்கள் கல்வி மறுப்பு
அதனால்தான் குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர்த்து, இந்த "தேசமாய்" விளங்கும் 90 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெரும்பான்மை மக்கள் கல்வி கற்று விடக்கூடாது என்று பார்க்கிறார் மோடி. இந்த கெட்ட எண்ணத்தில்தான் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய நடுவண் அமைச்சரவை கூட்டம், தற்போது நடைமுறையில் இருக்கும் எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்ய ஒப்புதலளித்திருக்கிறது.
பாசிச நடவடிக்கை
இது அனைவருக்கும் கல்வி என்ற ஜனநாயக நடைமுறையை ஒழித்துக்கட்டும் பாசிச நடவடிக்கையாகும்.
முதலில் "கல்வி", "கற்றல்" ஆகிய சொற்களின் பொருள் என்ன என்பதுதான் கேள்வி! கல்வி என்பது திரட்சியான, முழுமையான ஒரு பொருளன்று; அது வரையறையற்றது, முடிவற்றது. அதைக் கற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும்; கற்று முடித்தாகிவிட்டது என்று சொல்ல முடியாது.
கற்பது, கற்றுக் கொண்டேயிருப்பதுதான் கல்வி! ஆக, கற்க வாய்ப்பளிப்பதுதான் வேண்டியதே தவிர, தேர்வின் மூலம் மேற்கொண்டு கற்க தகுதியுடையவர், தகுதியில்லாதவர் என்று பிரிப்பது சரியல்ல.
துளிர்விடும் போதே கிள்ளி எறிதல்
மேலும் தொடக்கக் கல்வி நிலையிலேயே - மாணவர்கள் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி காலத்திலேயே, அதாவது துளிர் விடும்போதே அதனைக் கிள்ளியெறிவது போல் இருக்கிறது, தொடக்கக் கல்வியில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யும் மோடியின் முடிவு.
இது மக்கள் விரோத நடவடிக்கை, மாநில உரிமையைப் பறிக்கும் செயல்.
தமிழக அரசு ஏற்கக் கூடாது
தமிழக வாழ்வுரிமைக் கட்சி இதை வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இதைக் கைவிடக் கோருகிறது.
தமிழக அரசும் இதை ஏற்கக்கூடாது, எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.