திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது - ஸ்டாலின் பொளேர்
திராவிட முன்னேற்றக்கழகத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: திராவிட முன்னேற்றக்கழகத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது பற்றி ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
ஈரோட்டில் மாநாடு
2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழி, ஆ.ராசாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் மாவட்டந்தோறும் ஆய்வு செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஈரோட்டில் மார்ச் 24 மற்றும் 25-ல் திமுக மண்டல மாநாடு நடத்தப்படும்.
11 தீர்மானங்கள்
மோட்டார் வாகன திருத்தச்சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும். முதத்லாக் தடை மசோதாவையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. முத்தலாக் மசோதா தொடர்பான முஸ்லிம்களின் அச்சத்தை போக்க வலியுறுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று கூறினார் ஸ்டாலின்.
கடன் தள்ளுபடி
தமிழக அரசின் கடன்சுமை அதிகரித்து வருவதால், நிதிநிலைமையை சரி செய்ய வேண்டும். நிபுணர் குழுவை அமைத்து நிதிநிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகளின் அனைத்துக் கடனையும் அரசு தள்ளபடி செய்யவேண்டும்.
திமுக இரங்கல்
ஓகி புயலால் இறந்தவர் குடும்பங்களுக்கு திமுக இரங்கல் தெரிவித்துள்ளது. ஓகி புயலால் பாதித்தவர்களுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு எல்லைகளை மறுவரையரை செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொட்டுப்பார்க்க முடியாது
திமுக அழிந்து வருவதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று தெரிவித்தார். போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினை தொடர்பாக முதல்வரிடம் பேசியது தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.
முதல்வரிடம் பேசுவேன்
முதல்வரிடம் தொலைபேசியில் பேசுவது தொடருமா என்று கேட்டதற்கு, இது புதிய விசயமல்ல என்றும் ஓபிஎஸ் முதல்வராக இருந்த போதே நேரடியாக சென்று பேசியுள்ளேன், இது தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.