வெறிச்சோடியது மெரினா... வழக்கமான கூட்டம் இல்லை.. 144 தடை எதிரொலி.. மக்கள் கடும் அதிருப்தி!
சென்னை: மெரினா கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெரினா கடற்கரைப் பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. 144 தடை ஆணை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு நடத்த வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 17ம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். அதன்பயனாக தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது.
ஆனால், நிரந்தர சட்டம் கொண்டு வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்களின் இந்த அமைதி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் திரண்டனர்.
தடியடி நடத்திய காவல்துறை
மாணவர்களின் போராட்டம் காரணமாக குடியரசு தின விழா நிகழ்ச்சி பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் கடந்த 23ம் தேதி அதிகாலை மெரினா கடற்கரையில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது தடியடியும் நடத்தப்பட்டது. அங்கிருந்து கலைந்து சென்ற மாணவர்கள், இளைஞர்கள் மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்துவதை கண்டித்து சென்னையில் ஆங்காங்கே மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தீக்கிரையான வீடுகள், வாகனங்கள்
அப்போது ஏற்பட்ட வன்முறையில் 100க்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. நடுக்குப்பத்தில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் குடிசை வீடுகளும் இந்த வன்முறையில் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசாரே தீ வைத்தனர்
இந்த வன்முறை சம்பவத்திற்கு போலீசார் தான் காரணம் என பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. வாகனங்கள், குடிசைகளுக்கு போலீசார் தீ வைத்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளிவந்து அதிர்ச்சியளித்தன. மாணவர்கள் போராட்டம் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் 3 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த மெரினா கடற்கரை சாலை கடந்த 26ம் தேதி பிற்பகலில் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.
மீண்டும் போராட்டம்?
இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று கூட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து வாட்ஸ் அப்பிலும் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான போலீசார் நேற்று காலை முதல் குவிக்கப்பட்டனர்.
போலீசார் பிடியில் மெரினா சாலைகள்
மெரினா கடற்கரையை இணைக்கும் அவ்வை சண்முகம் சாலை, சாந்தோம் சாலை என 7 சாலைகளில் பேரி கார்டு அமைக்கப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரைக்குள் நுழையும் வழியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று திடீரென ஆயிரக்கணக்கான போலீசார் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மெனாவில் 144 தடை ஆணை
இதையடுத்து மீண்டும் மெரினாவில் போராட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அங்கு 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உட்பட 6 இடங்களில் 144 தடை உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தோடு வந்தால் தடையில்லை
இந்த உத்தரவின் படி மெரினா மற்றும் அதன்சுற்று வட்டாரப்பகுதியில் ஒரு இடத்தில் 4 பேருக்கு மேல் கூடக்கூடாது. உண்ணாவிரதம், போராட்டம், மனித சங்கலி, கூட்டம் போடுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவதார்கள்.
அதே நேரத்தில் குடும்பத்துடனும் ஓய்வு எடுப்பதற்காக வருபவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் எந்த வித தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருமே இல்லாததால் வெறிச்சோடிய மெரினா
இருப்பினும் விடுமுறை நாளான இன்று வழக்கமான கூட்டம் இன்றி மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கமாக ஏராளமான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மெரினா கடற்கரை பகுதியில் கிரிக்கெட் விளையாடுவார்கள். ஆனால் 144 தடை காரணமாக மெரினா பகுதியில் இளைஞர்களையோ சிறுவர்களையோ காணமுடியவில்லை.
நிசப்தமான நினைவிடங்கள்
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு கூட மக்கள் வரவில்லை. காலையில் சிலர் நடைப்பயிற்சி மேற்கொண்ட்தோடு சரி. அதன்பிறகு மெரினா கடற்கரைப் பகுதி மக்கள் நடமாட்டம் இன்றியும் வழக்கமான விடுமுறை நாள் உற்சாகமின்றியும் காணப்படுகிறது.
144 தடைக்கு மக்கள் அதிருப்தி
சென்னை மெரினாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மெரினாவில் எந்த ஒரு போராட்டமும் நடைபெறாத நிலையில் போலீசாரின் இந்த நடவடிக்கை தேவையற்றது என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். போலீசாரின் தடையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அண்ணா நினைவுதின ஊர்வலம் நடக்குமா?
144 தடை ஆணை பிப்ரவரி 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் 48-வது நினைவு தினம் அடுத்த மாதம் 3-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்துவார்கள். தடை உத்தரவால் அஞ்சலி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.