என்னை யாராலும் அசைச்சுக்க முடியாது, அசைச்சுக்க முடியாது... விஜயகாந்த்
உளுந்தூர்ப்பேட்டை: மக்களுக்குப் பிரச்சினை என்றால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நான் இறங்கி விடுவே. எனக்கு யாரிடமும் பயம் கிடையாது. எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி என்னை அசைக்க முடியாது என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
உளுந்தூர்ப்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஆரியநத்தம், கிழக்கு மருதூர் உள்ளிட்ட கிராமங்களில் வேன் மூலமாக பிரச்சாரம் செய்தார் விஜயகாந்த்.
வழக்கம் போல காமெடி கலந்து அவர் பேசியதைக் கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்து ரசித்தது. அவரது பேச்சிலிருந்து:
நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். இந்த பூமி அனைத்தும் விவசாய பூமியாகும். ஆனால் இங்கு விவசாயம் சரியாக நடைபெறவில்லை. இங்குள்ள கிராமங்களில் சாலைகள் குண்டும்-குழியுமாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இங்கு சரியான சாலை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. நான் வந்ததும், இங்கு தரமான சாலை அமைத்து தருவேன்.
இங்கு குடிநீர் தட்டுப்பாடும் அதிகமாக இருக்கிறது. என்னைப் பற்றி கேட்டுப் பாருங்கள், விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்தேன். அதேபோல் இங்கும் நான் வெற்றி பெற்று வந்ததும் மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்க செய்து, குடிநீர் பஞ்சத்தை போக்குவேன். ஏரிகள் அனைத்தையும் தூர் வாருவேன்.
திருநாவலூர் ஒன்றியத்துக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். நீங்கள் யாரையும் பார்த்தும் பயப்பட வேண்டாம். உங்களுக்காக நான் இருக்கிறேன். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து இந்த பகுதியை வளர்ச்சியடைய விடாமல் தடுத்து வருகிறார்கள்.
எந்த கொம்பனாலும் என்னை அசைக்க முடியாது. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி பாடுபடுவேன். எனக்கு எதிரிகளே இல்லை. எனக்கு அதிமுக, திமுக, பாமக தொண்டர்கள் யாரும் எதிரிகள் கிடையாது. அவர்களது கட்சிகளின் தலைமையே எனக்கு எதிரிகள் ஆவர் என்றார் அவர்.