சென்ட்ரல் குண்டு வெடிப்பு தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை: தமிழக போலீஸ்
சென்னை: சென்னை சென்ட்ரலில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கும் சென்ட்ரல் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பில்லை என்று தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த ஆசிப் (25) என்பவரின் உடலில் நிறைய காயங்கள் இருந்தன. இதுகுறித்து, டாக்டர்கள் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியிருக்கிறார்.

அந்த காயங்கள் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுபோல் தெரிந்ததால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆசிப் உட்பட கைது செய்யப்பட்ட 3 பேரும் மும்பை மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு களில் தொடர்புடையவர்கள் என்று செய்திகள் வெளியாயின. இதுகுறித்து சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை சென்ட்ரலில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கும் சென்ட்ரல் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பில்லை. குற்றவாளிகளை பிடிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறோம். விரைவில் அவர்களை பிடிப்போம் இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications