இப்ப மட்டுமில்லங்ணா... எப்பவுமே ஜோசப் விஜய் தானுங்ணா
நடிகர் விஜய், ஜோசப் விஜய் என்று இப்ப மட்டுமல்ல எப்போது அறிக்கை விட்டாலும் அப்படித்தான் குறிப்பிடுவாராம்.
Recommended Video
சென்னை : மெர்சல் படத்திற்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்ட போது அனைவராலும் பார்க்கப்பட்ட விஷயம் அவர் ஜோசப் விஜய் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவர் எப்போது அறிக்கை வெளியிட்டாலும் ஜோசப் விஜய் என்றே தான் அறிக்கை வெளியிடுவார் என்பது கூடுதல் தகவலாகும்.
மெர்சல் திரைப்படத்தில் கோவிலை கட்டுவதற்குப் பதில் மருத்துவமனைகள் கட்டலாம் என்று நடிகர் விஜய் வசனம் பேசுவதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் மெர்சல் விவகாரத்தில் நடிகர் விஜயை விமர்சிக்கும் போது ஜோசப் விஜய் என்று மதத்தின் பெயரை குறிப்பிட்டு டுவீட் போட்டார்.
எச்.ராஜாவின் இந்த டுவீட்டிற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. மதவாத அரசியலைத் தூண்ட முயற்சிப்பதாக பலரும் எச். ராஜாவை கடுமையாக சாடினர். மெர்சல் விவகாரத்தில் விஜயை மதத்தின் பெயரைக் கொண்டு குறிப்பிட்டு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்ற, மனிதனுக்குத் தான் மதிப்பு மதத்திற்கு இல்லை என்று எச். ராஜாவிற்கு பதிலடி கிடைத்தது.
சர்ச்சையை கிளப்பிய ராஜா
இந்த கொள்ளி அடங்குவதற்குள் நடிகர் விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை டுவிட்டரில் வெளியிட்டு அடுத்த பரபரப்பை கிளப்பினார் எச். ராஜா. நான் சொன்னது உண்மை தான் அவர் ஜோசப் விஜய் என்பதற்கான ஆதாரம் என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டையை எப்படி வெளியிடலாம் என்ற சர்ச்சையை அது ஏற்படுத்தியது.
மக்களுக்கு நன்றி
இந்நிலையில் மெர்சல் திரைப்படத்தை வெற்றிப் படமாக்கியதற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சி. ஜோசப் விஜய் என்றும் 'ஜீசஸ் சேவ்ஸ்' என்றும் இடம்பெற்றுள்ளது.
புதிதல்ல
இது எச்.ராஜாவிற்கு கொடுத்த பதிலடி அறிக்கையாக பார்க்கப்பட்டாலும், எப்போது நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டாலும் இதே லெட்டர் பேட் வடிவத்தில் தான் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் விஜய் ஒரு கடிதம் எழுதினார். சினிமாத் துறை மீதான சேவை வரியை ரத்து செய்து இந்தத் துறையை காப்பாற்ற வேண்டும் என்று அதில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
உண்மை வெட்டவெளிச்சம்
அந்த அறிக்கையிலும் கூட ஜோசப் விஜய் என்றும், ஜீசஸ் சேவ்ஸ் என்றும் தற்போது வெளியான அறிக்கை வடிவத்திலேயே கடிதம் எழுதியுள்ளார். ஆனால் விஜய் தன்னை ஜோசப் விஜய் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் எந்த புதுமையும் இல்லை, இதை வைத்து மத அரசியல் செய்பர்வகளுக்குத் தான் இது புதிய விஷயம் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.