முடங்கிய தமிழக அரசு நிர்வாகம்- கடன் பாக்கி செலுத்தாததால் வல்லூரில் மின்உற்பத்தி கட்!!
தேசிய அனல் மின் கழகத்திற்கு கடன் பாக்கியை செலுத்தாததால் வல்லூர் அனல்மின் நிலையத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவள்ளுர் மாவட்டம் வல்லூர் அனல்மின்நிலையத்தில் மின்சாரம் வாங்கியதற்காக தேசிய அனல் மின் கழகத்தில் கடன் பாக்கியை செலுத்ததால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தேசிய அனல்மின் கழகமும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகமும் இணைந்து தலா 50 சதவீதம் முதலீட்டில் தமிழ்நாடு எரிசக்தி நிறுவனம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் வல்லூரில் உள்ள அனல்மின்நிலையத்தில் 500 மெகாவாட் உற்பத்திதிறன் கொண்ட 3 அலகுகள் மூலம் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பங்காக 1,065 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. மீதம் உள்ள மின்சாரம் தென்மாநிலங்களான ஆந்திரா, கேரளா உள்ளிட்டவற்றிற்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
நோட்டீஸ்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் 17-ந்தேதி வரை மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதன் மூலம் வல்லூர் அனல்மின்நிலையத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடி செலுத்த வேண்டி உள்ளது. இந்த தொகையை வரும் 26-ந்தேதிக்குள் செலுத்துமாறு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு, வல்லூர் அனல்மின்நிலைய நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மின் உற்பத்தி நிறுத்தம்
தவறும் பட்சத்தில் 26-ந்தேதி நள்ளிரவு முதல் மின்சார வினியோகத்தை நிறுத்துவதாக கூறியிருந்தது. எனினும் கடன் பாக்கி திரும்ப செலுத்தப்படாததால் நேற்று நள்ளிரவு முதல் வல்லூர் அனல் மின் நிலைய 2 வது மற்றும் 3வது அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மின்வெட்டு அபாயம்
தமிழகத்தில் கோடை வெப்பம் உக்கிரமாக சுட்டெரித்து வரும் நிலையில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் வல்லூர் அனல்மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் வடசென்னை அனல் மின்நிலையத்திலும் கொதிகலன் பழுது, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி தடைபட்டுள்ளது. மின்உற்பத்தி நிறுத்தம் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிர்வாகத் திறமை இன்மை
4 மாதத்திற்கு முன்னரே நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியமும், தமிழக அரசு துரித கதியில் செயல்படாததால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது அரசின் நிர்வாகத்திறமின்மையை காட்டுவதாகவே அனைத்துத் தரப்பினரும் கருதுகின்றனர்.