ஜெ.- வீட்டில் மனு கொடுத்துவிட்டு கோட்டையில் முதல்வரை சந்தித்த கூடங்குளம் போராட்ட குழு!
சென்னை: கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் அவரது அரசியல் செயலாளரிடம் கூடங்குளம் போராட்டக் குழுவினர் மனு கொடுத்தனர். பின்னர் கோட்டையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதுகுறித்து கூடங்குளம் போராட்டக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சார்ந்த சுப. உதயகுமார், முகிலன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த கோ. சுந்தர்ராஜன், வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆகியோர் நேற்று காலை அ.தி.மு.க பொதுச்செயலாளரான ஜெயலலிதா இல்லத்துக்குச் சென்று கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகளை நிறுவக் கூடாது என்று கோரும் விண்ணப்பம் ஒன்றை அளித்தோம்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் அரசியல் செயலாளர் எங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டார். பின்னர் புனித ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று மாலை 4 மணியளவில் தமிழக முதல்வரை சந்தித்தோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் இரண்டு உலைகளுமே முடங்கிக் கிடக்கும்போது, 3, 4 உலைகளை நிறுவுவதற்கு இந்திய அரசும், ரஷ்ய அரசும் ஒப்பந்தம் போடுகிறார்கள்.
மேலும் 5, 6 உலைகளும் நிறுவப்படும் என்று அறிவிக்கிறார்கள். கேரளத்தில் ஓர் அணுமின் நிலையம்கூட அமைக்க மறுக்கிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலாரில் புதைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள்.
அதுபோல மகராஷ்டிரா மாநிலம் ஜைத்தாப்பூரில் அணுமின் நிலையம் வேண்டாம் என்று ஆளும் பாஜக கட்சியே நிலைப்பாடு எடுக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கூடுதல் உலைகளை நிறுவுகிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்தி தமிழக மக்கள் நலன்களை காக்க வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக் கொண்டோம்.
போராடும் மக்கள் மீது இன்னும் நூற்றுக்கணக்கான வழக்குகள் இருப்பதையும் அதனால் எங்கள் பகுதி இளைஞர்கள் கடவுச்சீட்டுப் பெறுவதிலும், வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதிலும் பெரும் பிரச்சினைகள் இருகின்றன என்பதயும் முதல்வருக்குச் சுட்டிக்காட்டினோம்.
பொறுமையாக எங்கள் கருத்துக்களைக் கேட்டுக்கொண்ட தமிழக முதல்வர் கட்சித் தலைமையோடும், அரசுத் துறைகளோடும் பேசி ஆவன செய்வதாக உறுதியளித்தார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு 1222 நாட்களாக நடந்து வரும் எங்கள் போராட்டத்துக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும், தெம்பூட்டுவதாகவும் அமைந்தது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.