அரசு வேலை வழங்க வேண்டும்- ஈராக்கிலிருந்து மீண்ட நர்ஸ் மோனிஷா
தூத்துக்குடி: ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பத்திரமாக மீண்டு தூத்துக்குடி திரும்பியுள்ள நர்ஸ் மோனிஷா, தனக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி, கால்வெல்டு காலனியை சேர்ந்த எபி என்பவரின் மகள் லெஜிமா ஜெரோ மோனிஷா. இவர் பி.எஸ்சி., நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த பிப்ரவரியில் ஈராக் நாட்டிற்க்கு சென்ற அவர், திக்ரித் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார்.
தற்போது அங்கு உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டும், பினையக் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டு உள்ளனர். இதில் தூத்துக்குடி நர்ஸ் மோனிஷா பணியாற்றும் மருத்துவமனையில் 46 இந்திய நர்ஸ்களை தீவிரவாதிகளை முடக்கி வைத்திருந்தனர்.
சுமார் 20 நாட்களாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வரமுடியாத நிலையில் இருந்த அவர்களை மீட்க கேரளா,தமிழக அரசுகள் மற்றும் மத்திய அரசு எடுத்த தீவிர முயற்சியால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடிக்குப் புறப்பட்டார் நர்ஸ் மோனிஷா.
வழியில் நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மீட்கப்படுவதற்காக முயற்சித்த அரசுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி. கேரளாவை சேர்ந்த நர்ஸ்கள் அனைவருக்கும், கேரள அரசு மருத்துவ மனைகளில் வேலைவாய்ப்பு தருவதாகவும், கல்விக்கடன்களை ரத்துசெய்வதாகவும் தெரிவித்துள்ளது. எனவே தமிழக அரசும் எங்கள் எதிர் காலத்தையும், குடும்ப சூழலையும் கருத்தில் எங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.