சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் அணி வழக்கு!
ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அந்த நேரத்தில் இக்கேள்விக்கு தக்க பதில் அளிப்பார் என்றார் மாஃபா பாண்டியராஜன்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் ஆவடி தொகுதி எம்.எல்.ஏவுமான மாஃபா பாண்டியராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி இதுதான்:
தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி, செக்ஷன் 32கீழ், அடிப்படை உரிமைகள் என்ற ஷரத்தின்கீழ், வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.
10 நாட்கள் நடந்த பல நிகழ்வுகள் , கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டது, சட்டசபையில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தியது, மறைமுக வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உரிமை இருந்தும் அதை பயன்படுத்தாது, எண்ணற்ற விதிமுறைகள் மீறல் நடந்துள்ளது என அனைத்தையும் உள்ளடக்கி சுப்ரீம் கோர்ட்டை நாங்கள் அணுகியுள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
உண்மையான அதிமுக
உண்மையான அதிமுக என்பது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும். அவைத்தலைவராக மதுசூதனன் செயல்படுவார். இது சட்ட ரீதியான தீர்ப்பாகவும், தேர்தல் கமிஷன் மூலமாகவும் உறுதிப்படும்.
26 குற்றச்சாட்டுகள்
26 குற்றச்சாட்டுகள் அடிப்படையில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்தியாவின் பெரிய வழக்கறிஞர் வழக்கில் ஆஜராகிறார். எனவே எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.
ஆர்.கே.நகர் தேர்தல்
ஆர்.கே.நகரில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளர் களமிறக்கப்படுவாரா என்ற நிருபரின் கேள்விக்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகள் இதுகுறித்து கலந்து ஆலோசித்துக் கொண்டுள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அந்த நேரத்தில் இக்கேள்விக்கு தக்க பதில் அளிப்பார்.
தினகரன் யார்?
டி.டி.வி.தினகரன் அதிமுகவில் அமைத்த ஆட்சிமன்ற குழுவை நாங்கள் ஏற்கவில்லை. அவரை துணை பொதுச்செயலாளர் என்று தேர்தல் ஆணையமே அங்கீகரிக்கவில்லை. எனவே நாங்களும் அவரை அங்கீகரிக்கவில்லை. விரைவில் நாங்கள் ஆட்சிமன்ற குழுவை முறைப்படி அறிவிப்போம். இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.