கொடநாடு பங்களாவில் ரூ.900 கோடி... கட்டுக்கட்டாக பணம்... ஐடி ரெய்டு பின்னணி
கொடநாடு பங்களாவில் ரூ.900 கோடிக்கு மேல் பணம் இருப்பதாக கொள்ளையர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அங்கு வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா, சசிகலா அறைகளில் 900 கோடி ரூபாய்க்கு மேல் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசில் கொள்ளையர்கள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதனடிப்படையில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
ஜெயலலிதா, சசிகலாவின் படுக்கை அறை உட்பட அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடநாடு பங்களாவில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த கொள்ளை குறித்து 4 மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் டிரைவர் கனகராஜ் விபத்தில் மரணமடைந்து விட்டார். அதேபோல பாலக்காடு அருகில் விபத்தில் சிக்கிய சயனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கொள்ளையர்கள் கைது
பங்களாவுக்குள் நுழைந்த 11 பேர் கொண்ட கும்பல், அங்குள்ள 3 அறைகளில் பணம் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்தனர். இக்கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர். இதில் தொடர்புடைய 11 பேரில், 9 பேர் சிக்கிவிட்டனர். தலைமறைவாக ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிடுக்கிப்பிடி விசாரணை
கைது செய்யப்பட்ட பலரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்சிர் அலி மற்றும் ஜித்தன் ஜாய் ஆகியோர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 900 கோடி பணம்
திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கிய 550 கோடியை தவிர மீதமுள்ள பணம் 900 கோடி பல்வேறு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளே நுழைந்ததாகவும் இருவரும் கூறியுள்ளனர்.
கொள்ளையடிக்க திட்டம்
ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கி இருந்த அறை மற்றும் படுக்கை அறையில் 200 கோடிக்கு மேல் பணம் இருப்பதாகவும் அதை ஒட்டியுள்ள மற்றொரு அறையில் பல ரேக் மற்றும் சூட்கேஸ்களில் கட்டு கட்டாக பணம் இருந்ததாகவும், அதை பார்த்து நாங்கள் மிரண்டு போனதாகவும் ஜம்சிர் அலி மற்றும் ஜித்தன் ஜாய் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
வருமான வரி சோதனை
கொள்ளையர்கள் அளித்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து போயினர். இதனையடுத்தே பங்களாவில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
பங்களாவில் ரெய்டு
சென்னை மற்றும் கோவையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவே நீலகிரி மாவட்டத்துக்கு சென்றுவிட்டனர். இன்று காலை 7 மணியளவில் எஸ்டேட் பங்களாவுக்குள் அதிரடியாக நுழைந்தனர். பங்களா அறை கதவை மூடிவிட்டு சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவணங்கள் மாயம்
கொடநாடு, கொலை, கொள்ளை சம்பவத்தில் இன்னும் சிலரை விசாரிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கொடநாடு பங்களாவிற்குள் எந்த வித தடையும் இன்றி சென்று வரும் சஜீவன், தோட்டம் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட ரஜனி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற ரஜனி, ஏராளமான ஆவணங்களை எடுத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளையில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.