சீட் கிடைக்காத கோபம்... தேர்தல் பறக்கும் படைக்கு ‘ரகசிய தகவல்’ தரும் சொந்தக்கட்சி அதிருப்தியாளர்கள்
சென்னை: வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களின் இருப்பிடத்தை, சொந்தக் கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர்களே தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவலாக சொல்லி வருகிறார்களாம்.
தமிழகத்தில் அடுத்தமாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. அதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

தங்களுக்கு வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் இவ்வாறு சோதனை நடத்தி பணம் மற்றும் பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்வதாகக் கூறுகின்றனர். ஆனால், இவ்வாறு பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் தருவது யார் என விசாரித்தால், அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றன.
அதாவது, கட்சிகள் அனைத்தும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக ஒவ்வொரு தொகுதியிலும் தங்களது கட்சிக்காரர்கள் உதவியுடன் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைப் பதுக்கியதாகத் தெரிகிறது.
அதிலும் குறிப்பாக தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால், பெரும்பாலான கட்சிகள் தங்களது பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பள்ளிகளில் தான் பதுக்கி வைத்துள்ளனராம். சில இடங்களில் பள்ளிக் காவலர்களை மிரட்டி, பள்ளி உரிமையாளர்களுக்குத் தெரியாமலேயே இந்த பதுக்கல்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விரும்பியவர்கள் தங்கள் கட்சி சார்பில் விருப்பமனுத் தாக்கல் செய்தனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் தேர்தலில் வாய்ப்பளிக்க முடியாது என்பதால், ஒவ்வொரு தொகுதிகளிலும் சொந்தக் கட்சியிலேயே பல அதிருப்தியாளர்கள் உருவாகியுள்ளனர்.
இவர்கள் தான் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில், பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கியுள்ள இடத்தை ரகசியமாக தேர்தல் பறக்கும் படைக்குப் போட்டுத் தருகிறார்களாம். இது தான் சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்பது போல...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைப் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ரூ. 3 கோடியே 40 லட்சம் ரொக்கப்பணமும், சுமார் 200க்கும் அதிகமான தங்க நாணயங்களும் மீட்கப்பட்ட சம்பவத்தில், முன்கூட்டியே பள்ளியின் காவலாளி, யாரோ சிலர் தன்னை மிரட்டி, சில மூட்டைகளைப் பள்ளியில் வைக்கும்படி போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அதை போலீஸார் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் தற்போது விசாரணையில் வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications