எம்எல்ஏக்களுக்கு லஞ்சம்- எம்எல்ஏ சரவணனிடம் விளக்கம் கேட்டுள்ளோம் - ஓபிஎஸ்
சென்னை: பண பேரம் குறித்து பேசிய எம்எல்ஏ சரவணனிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பேரம் நடந்ததாக சரவணன் கூறியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ் இவ்வாறு தெரிவித்தார்.
டைம்ஸ் நவ் - மூன் டிவி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய சரவணன் கொடுத்துள்ள தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மிகப் பெரிய அளவில் பணத்தை வாரியிறைத்து ஜனநாயகத்தையும், மக்கள் அளித்த தீர்ப்பையும் கேவலப்படுத்தியுள்ளனர் இரு தரப்பு அதிமுகவும் என்பதை இந்த ஸ்டிங் ஆபரேஷன் நிரூபிப்பதாக உள்ளது.

சசிகலா குரூப் தனது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பல கோடிகளை வாரியிறைத்ததாக கூறிய சரவணன், தலைக்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 10 கோடி வரை கொடுத்தாக கூறினார். அதிகபட்சமாக 3 பேருக்கு மட்டும் தலா ரூ.10 கோடி வரை தரப்பட்டதாக சரவணனே தெரிவித்துள்ளார்.
பஸ்ஸில் ஏறியபோது ஒரு ரேட், ரிசார்ட் போனதும் இன்னொரு ரேட் என தாறுமாறாக சசிகலா குரூப் பணத்தைக் கொடுத்து எம்எல்ஏக்களை அமுக்கியது என்று சரவணன் கூறிய தகவல் மக்களை அதிர வைத்துள்ளது.
சரவணனும் கூட கூவத்தூர் முகாமில் இருந்தவர்தான். கடைசி நேரத்தில் அவர் அங்கிருந்து தப்பி வெளியே வந்து ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார். எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா மீதும் போலீசில் அவர் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அவர் பேசிய வீடியோவில் ஓ.பிஎஸ் அணியும் பணம் கொடுத்ததாக கூறியுள்ளதும் மக்களை அதிர வைத்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு ரூ. 1 கோடி வரை பேரம் பேசியதாக சொல்லியுள்ளார் சரவணன். அப்படியானால் ஓபிஎஸ் தரப்பிடமிருந்து மற்றவர்களும் பணம் வாங்கினார்களா என்ற பெரும் சந்தேகமும், கேள்வியும் எழுந்தது.
இது குறித்து இன்று ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், பண பேரம் குறித்து பேசிய எம்எல்ஏ சரவணனிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று மட்டும் கூறியுள்ளார்.
அப்போ ஆபரேசன் உண்மைதானா ஓபிஎஸ்?












Click it and Unblock the Notifications