மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான்... பூசி மெழுகும் ஓபிஎஸ்
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தின் பேருந்து கட்டணம் மற்ற மாநிலங்களின் கட்டணங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவுதான் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த வாரம் 8 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் இருந்து வந்தனர்.
இதையடுத்து நீதிமன்றம் தலையிட்டதன் பேரில் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. இந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்துக்குள் பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அண்டை மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. தமிழகத்தில் சாதாரண பேருந்து கிலோமீட்டர் ஒன்றுக்கு 60 பைசாவாக இருக்கும் கட்டணம் ஆந்திரத்தில் 63 பைசாவாகவும், கேரளத்தில் 64 பைசாவாகவும், கர்நாடகத்தில் 59 பைசாவாகவும் உள்ளது.
அதேபோல் விரைவு பேருந்துகளில் தமிழகத்தில் கிலோ மீட்டருக்கு 80 பைசாவாகவும், ஆந்திரத்தில் 87 பைசாவாகவும், கர்நாடகத்தில் 90 பைசாவாகவும், கேரளத்தில் 72 பைசாவாகவும் உள்ளது.
மேலும் அதி சொகுசு பேருந்துகளில் தமிழகத்தில் கிலோ மீட்டருக்கு 90 பைசாவாகவும், ஆந்திரத்தில் 98 பைசாவாகவும், கர்நாடகத்தில் ரூ1. 12 பைசாவாகவும், கேரளத்தில் 90 பைசாவாகவும் உள்ளது.
வால்வோ பேருந்துகளில் தமிழகத்தில் கிலோ மீட்டருக்கு ரூ.1.70 பைசாவாகவும், ஆந்திரத்தில் ரூ.1.82 பைசாவாகவும், கர்நாடகத்தில் ரூ.1.90 பைசாவாகவும், கேரளத்தில் ரூ.1.30 பைசாவாகவும் உள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆவடியில் கூறுகையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான் என்றார்.