குடியரசு தின விழா அரசுத்துறை வாகனங்களில் ஜெ. படங்கள்... 'இரட்டை மோசடி’ என கருணாநிதி சாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு, அரசின் சாதனைகளை விளக்கும் வாகனங்கள் அணிவகுப்பில் ஜெயலலிதா படங்கள் இருந்ததோடு, முதல்வர் பன்னீர்செல்வத்தின் படம் இல்லை என்பது 'இரட்டை மோசடி' என திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றிருந்தது மாத்திரமல்ல; ஒரு வாகனத்தில் கூட தற்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் படம் இடம் பெறவில்லை என்பது இரட்டை மோசடி. காரணம், அரசுத் துறை அதிகாரிகள் யாரும், அவரை முதல் அமைச்சராகக் கருதி ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த அளவுக்குத் தான் தமிழக அ.தி.மு.க. அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

OPS not yet accepted as CM: Karunanidhi

கடந்த 25-11-2014 அன்று தமிழக நாளேடுகளில் ஒரு செய்தி வந்தது. அதாவது அரசு அலுவலகங்கள், கட்டடங்கள், திட்டங்கள், பாடப் புத்தகங்கள், இணைய தளங்கள் என அனைத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் படங்கள் வேண்டுமா என்ற கேள்வியுடன் கழகச் சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய முதல் அமர்வு விசாரித்து அளித்த உத்தரவில், "அரசு அலுவல கங்கள், பொதுக் கட்டிடங்களில் யார் யாருடைய புகைப்படங்ளை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அரசாணைகள் 1978, 1981, 1990 இல் வெளியிடப்பட்டுள்ளன.

சமீபத்தில், சட்டசபைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பாணையில், முன்னாள் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைத் தொகுதி, காலியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, மேற்கூறிய அரசாணைகளை மனதிலே கொண்டு, மனுதாரர் அனுப்பிய மனு மீது, ஒரு மாதத்துக்குள், அரசு உயர் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு இவ்வாறு ஒரு மாதத்துக்குள், அரசு உயர் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, ஒரு மாதத்திற்குப் பதிலாக இரண்டு மாதங்கள் முடிவடைந்த போதிலும், அரசு உயர் அதிகாரிகள் இந்தத் தீர்ப்பு பற்றி என்ன முடிவெடுத்தார்கள் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு செயலால் பதில் அளிப்பது போல, குடியரசு தின அணிவகுப்பில் வந்த வாகனங்களில், சொத்துக் குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, முதலமைச்சர் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்து விட்ட ஜெயலலிதாவின் படங்களை இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தினால் ஜாமீனில் வெளியே வந்து, அவரது மேல் முறையீட்டு வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நேரத்தில் இப்படியெல்லாம் அரசு நிகழ்ச்சியில் தண்டனை பெற்ற ஒருவரின் படங்களைக் காட்சியாக்கி வெளியிட்டிருப்பது சட்டப்படி சரியானதுதானா என்றே தமிழக மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது...

கடந்த ஆண்டு நடைபெற்ற இதே குடியரசு தின விழாவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வந்த போது, அவருடைய கார் மக்கள் காத்திருக்கும் தூரம் வரை சென்று மக்களைப் பார்த்து வாழ்த்து தெரிவித்து விட்டு, அதன் பிறகுதான் குறிப்பிட்ட இடத்திலே வந்து அமர்ந்தார். இது எல்லா ஆண்டுகளிலும் முதல்வராக இருப்பவர்கள் செய்வதுதான். ஆனால் இந்த ஆண்டு முதல்வர் மக்களைப் பார்த்து வாழ்த்துச் சொல்லும் நிகழ்ச்சியையே ரத்து செய்ததோடு, நிகழ்ச்சி நிரலில் இருந்தே அதை எடுத்து விட்டார்கள்.

அதுபோலவே நிகழ்ச்சி முடிந்து முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா புறப்படுவதற்கு முன்பு, அனைத்து அமைச்சர்களும் அவர் அருகே வந்து வழியனுப்புவார் களாம். ஆனால் இந்த ஆண்டு முதலமைச்சர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட போது, எந்த அமைச்சரும் அவர் அருகிலே கூட வரவில்லையாம். அ.தி.மு.க. ஆட்சியில் மனம் போன போக்கில் தாறுமாறாக என்னவெல்லாம் நடக்கிறது என்பதற்கு இவைகள் எல்லாம் "நல்ல" உதாரணங்கள்தானே?"

இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+