அதிமுகவில் இருந்து ஒபிஎஸ் ஆதரவாளர்கள் 5 பேரை அதிரடியாக நீக்கிய ஜெ.: பின்னணி என்ன?
சென்னை: அதிமுகவில் கட்சி பொறுப்புகளில் இருந்த வேளச்சேரி அசோக் எம்.எல்.ஏ, டி.ரமேஷ், வரகூர் அருணாசலம், எல்லப்பட்டி முருகன், கே.மாரியப்பன் ஆகிய 5 பேரை அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கட்சி பதவி பறிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் ஒபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
அதிமுகவில் கட்சிப்பதவியோ, அமைச்சர் பதவியோ யாருக்கு எப்போது கிடைக்கும் என்று தெரியாது. அந்த கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி சேனலைப் பார்த்தே தெரிந்து கொள்வார்கள் அதிமுகவினர். இந்த நிலையில் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு சிலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய நிர்வாகிகளில் 5 பேரை கட்சியை விட்டு கட்டம் கட்டி அறிவித்துள்ளார்ஜெயலலிதா.
கட்சியில் இருந்து கட்டம்
தென் சென்னை தெற்கு மாவட்ட வேளச்சேரி பகுதி செயலாளராக இருந்த எம்.கே.அசோக் எம்.எல்.ஏ. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வேளச்சேரி பகுதி செயலாளராக 177வது மாமன்ற உறுப்பினர் எஸ்.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பில் இருந்து விடுவிப்பு
கழக மீனவர் பிரிவு துணை செயலாளர் டி.ரமேஷ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் வரகூர் அருணாசலம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
திடீர் நீக்கம் ஏன்?
இதேபோல தேனி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்த எல்லப்பட்டி முருகன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர கழக செயலாளராக இருந்த கே.மாரியப்பன் அப்பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டு அந்த பதவிக்கு துணை செயலாளராக இருந்த வி.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒபிஎஸ் ஆதரவாளர்கள்
இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருமே ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் ஆவர். ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் தலைமை செயலக வட்டாரத்தில் ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாருக்கு நெருக்கம்
தமிழக சட்டசபை தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரங்களை களை எடுக்க கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். கழக மீனவர் பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள டி.ரமேஷ், மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ராஜலட்சுமிக்கும், ஓபிஎஸ்-க்கு நெருங்கிய ஆதரவாளராம்.
சீட் வாங்க போட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் விருப்ப மனுக்கள் அண்மையில் வழங்கப்பட்டது. எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்று மன்னார்குடி வகையறாக்களை மொய்க்கத் தொடங்கியுள்ளனர் விருப்பமனு கொடுத்தவர்கள். கட்சியின் உற்சவர்கள், பரிவார தெய்வங்களையும் மொய்கத் தொடங்கியுள்ளனர் அதிமுகவினர்.
அலைமோதும் கூட்டம்
இந்த நிலையில் தேனியில் உள்ள அமைச்சர் ஓபிஎஸ் வீட்டிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனை அறிந்த ஜெயலலிதா, உளவுத்துறை மூலம் தகவல் அறிய உத்தரவிட்டுள்ளார். அவர்கள், தேர்தல் சீட்டுக்காக வருவதாக உளவுப்பிரிவு, ஜெயலலிதாவிடம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்தே ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கியதாக கூறப்படுகிறது.
பேனர் வைத்தவர்கள் நீக்கம்
தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எல்லப்பட்டி முருகன், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர செயலர் கே.மாரியப்பன் ஆகியோர் அம்மா நூறாண்டு காலம் வாழக வேண்டும் என்ற வேண்டுதலுடன் தைபூசத்தையொட்டி பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். அப்போது, போர்படைத் தளபதி சசிகலா என்று பெரிய பேனர் வைத்துள்ளனர். இதனாலேயே இவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சோகமான கொண்டாட்டம்
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பால் குடம், அன்னதானம் என்று அமர்களமாக நடந்தது. எல்லப்பட்டி முருகன் உற்சாகமாக பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் எல்லப்பட்டி முருகனை கட்சி பொறுப்பில் இருந்து கட்டம் கட்டி உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.
பேசியதால் நீக்கம்
முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் நீக்கப்பட்டதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. இவர் சின்னம்மா சசிகலாவின் கணவர் நடராஜனை சந்தித்து பேசியதாக தகவல் கசிந்துள்ளது. தேர்தல் நடைபெறும் வரைக்கும் இன்னும் யார் யார் தலை எப்படி உருளப்போகுதே என்று அதிமுகவினர் கலகத்தில் ஆழ்ந்துள்ளனர்












Click it and Unblock the Notifications