முதல்வர் வருகையும்.. ஓபிஎஸ் அணியின் உண்ணாவிரதமும்.. நெல்லையில் பரபரப்பு
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.236 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
நெல்லை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நலத்திட்ட உதவிகளை வழங்க நெல்லைக்கு வருகை தந்தார். அதேவேளையில் ஓபிஎஸ் அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக தொண்டர்கள் பெரும்பாலோனோர் கலந்துகொண்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி ஓ.பி.எஸ். அணியினர் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ள மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதன் ஒருபகுதியாக நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் தலைமை தாங்கினார்.
இதில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி, முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள், புறநகர் மாவட்ட பேரவை தலைவர் ஏ.கே. சீனிவாசன், எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் டி.பி.எம். ஷா, பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவர் லாரன்ஸ், வழக்கறிஞர் ஜோதிமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்திற்காக அமைக்கப்பட்ட பந்தலில் ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் பந்தல் நீட்டிக்கப்பட்டது. உண்ணாவிரதத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை மட்டுமல்லாது போராட்டம் நடைபெற்ற இடங்களில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வருகை தந்தார். இந்த விழாவுக்காக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகார மையத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏராளமானவர்களை அழைத்து வந்திருந்தது ஆளும் கட்சி தரப்பு.
இதனிடையே ஓபிஎஸ் அணியினரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள பல்வேறு ஊர்களில் இருந்து வேன்களில் நெல்லைக்கு வந்திருந்தனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இருப்பினும் திருநெல்வேலியிலிருந்து பாளையங்கோட்டை வரை, பொதுமக்களால் இடையூறு ஏற்படாத வண்ணம் இருக்கவும், கூட்டம் அதிகமாக கூடினால் சமாளிக்கவும் மூங்கில் மற்றும் சவுக்கால் தடுப்புகள் கட்டப்பட்டிருந்தன .ஆனால் போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லாமல், எடப்பாடி சென்ற சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.