ஆளுநருடன் ஓபிஎஸ் அணி சந்திப்பு.. நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரிக்கை
சட்டசபையில் நேற்று நடைபெற்ற களேபரத்துக்குப் பின்னர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியினர் இன்று ஆளுநரை சந்தித்து வருகிறார்.
சென்னை: சட்டசபையில் நேற்று நடைபெற்ற களேபரத்துக்குப் பின்னர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியினர் இன்று ஆளுநரை சந்திக்கவுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி அவர்கள் வலியுறுத்தலாம் என கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூப்பிப்பதற்காக நேற்று சிறப்பு சட்டசபை கூட்டப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்த திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது நாற்காலிகள் வீச்சு, பேப்பர் கிழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து திமுகவினரை சபைக் காவலர்கள் வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சியினரின் சட்டைகள் கிழிக்கப்பட்டு தாக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சியினர் இல்லாமலே வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி இல்லாமல் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பை செல்லாது என ஆளுநர் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இநநிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்து வருகின்றனர். அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி வலியுறுத்தலாம் என கூறப்படுகிறது. மேலும் சட்ட சபை நிகழ்வுகள் குறித்து அவர்கள் ஆளுநரிடம் முறையிடலாம் என்றும் தெரிகிறது.
பி.ஹெச்.பாண்டியன், செம்மலை, மைத்ரேயன், மதுசூதனன் உள்ளிட்டோரும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்சுடன் ராஜ்பவன் சென்றுள்ளனர்.