பச்சமுத்து கைது... மதன் இருக்கும் இடம் விரைவில் தெரியும் என்கிறார் வக்கீல்
சென்னை: பச்சமுத்துவை கைது செய்துள்ளதால் மதன் இருக்கும் இடம் குறித்து விரைவில் தெளிவு கிடைக்கும் என்றும் மதனுடைய தாய் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். வேந்தர் மூவிஸ் மதன் மாயமானாரா ? அல்லது மாயமாக்கப்பட்டாரா ? என மதன் வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் சினிமா பைனான்சியர் போத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக பட அதிபர் மதன் மீது புகார்கள் குவிந்தன. இந்த புகாரின் அடிப்படையில் மதன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வேந்தர் மூவிஸ் மதன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
மருத்துவக்கல்லூரி சீட்டு மோசடி விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம்.நிறுவனத் தலைவர் மற்றும் ஐஜேகே கட்சி தலைவருமான பச்சமுத்துவை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

வழக்கறிஞர் தினேஷ்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மதனுடைய தாய் தரப்பு வழக்கறிஞர், தினேஷ், நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார் . மதனை ஒரு கருவியாகத்தான் பச்சமுத்து பயன்படுத்தி இருக்கிறார். பச்சமுத்துவை கைது செய்துள்ளதால் மதன் இருக்கும் இடம் குறித்து தெளிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
மாணவரின் தந்தை பேட்டி
மருத்துவ கல்லூரியில் இடம் கேட்டு பச்சமுத்துவை சந்தித்ததாக மாணவரின் தந்தை சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார். மருத்துவ சீட்டுக்கு ரூ.45 லடசத்தை தமது ஏஜென்ட் மதனிடம் தருமாறு பச்சமுத்து கூறினார் என்று அவர் தெரிவித்துள்ளார். பச்சமுத்து கூறியபடி அரவது ஏஜென்ட் மதனிடம் ரூ.45 லட்சம் கொடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.
சினிமா பைனான்சியர் போத்ரா
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சினிமா பைனான்சியர் போத்ரா, வேந்தர் மூவிஸ் மதன் மாயமானாரா ? அல்லது மாயமாக்கப்பட்டாரா ? கேள்வி எழுப்பியுள்ளார். சினிமா பைனான்சியர் போத்ரா, மதன் மாயமான வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கிறார்.
பச்சமுத்து ஆட்கள் மிரட்டல்
இவர் இன்று தமது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாயமான மதனைத் தேடுவதில் எந்த பயனும் இல்லை என ஆதங்கம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய போத்ரா, வழக்கை வாபஸ் பெறுமாறு பச்சமுத்து ஆதரவாளர்கள் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மதன் கருவிதான்
இந்த விவகாரம் தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவைக் கைது செய்ய வேண்டும் எனவும் சினிமா பைனான்சியர் போத்ரா வலியுறுத்தினார். மேலும் பச்சமுத்து முன்னிலையில் தான், ஏழறை கோடி ரூபாய் பணத்தை மதனிடம் கொடுத்ததாகவும், மதன் வெறும் கருவியாக மட்டுமே செயல்பட்டதாகவும், இதன் பின்னணியில் பச்சமுத்து இருப்பதாகவும் பைனான்சியர் போத்ரா குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications