ஈழத் தமிழர்களுக்காகப் போராடியபோது உற்ற துணையாக இருந்தவர் பரதன்.. வேல்முருகன் புகழாரம்
சென்னை: ஏகாதிபத்திய, மதவாத சக்திகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயகக் குரல்களையும் ஓரணியில் திரட்டுவதில் பெருமுனைப்புடன் பணியாற்றிய பெரும் பண்பாளர் மறைந்த முதுபெரும் இடதுசாரித் தலைவர் ஏ.பி. பரதன் என்று தமிழக வாழ்வுரி்மைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
ஏ.பி. பரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
முதுபெரும் இடதுசாரித் தலைவரான மூத்த தோழர் ஏ.பி. பரதன் அவர்கள் மறைவு இந்திய ஜனநாயக சக்திகளுக்கு மாபெரும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
92 வயதான முதுபெரும் தோழர் ஏ.பி. பரதன் வங்கதேசத்தில் 1924ஆம் ஆண்டு பிறந்தவர்... இளம்வயதிலேயே இடதுசாரியாக திகழ்ந்தவர்.
வங்கதேசத்தில் இருந்து மராட்டிய மாநிலம் நாக்பூரில் குடியேறிய அவர் அத்தொகுதியில் இருந்து சட்டமேலவை மற்றும் நாடாளுமன்ற லோக்சபாத் தேர்தல்களை எதிர்கொண்டவர்.
மிகச் சிறந்த தொழிற்சங்கவாதியான தோழர் ஏ.பி. பரதன் அவர்கள் 1990ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலரான பின்னர் தேசிய அரசியலில் ஆழமான முத்திரை பதித்தவர். 1996ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலராக பதவி வகித்தவர்.
தமிழீழ இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட நேரத்தில் போராடிய நமக்கெல்லாம் உற்ற துணையாக இருந்தவர்.. அரசியல் பொதுவாழ்வில் முன்னுதாரணத்துடன் அப்பழுக்கற்ற மாமனிதராக திகழ்ந்தவர்.. ஏகாதிபத்திய, மதவாத சக்திகளுக்கு எதிரான அனைத்து ஜனநாயகக் குரல்களையும் ஓரணியில் திரட்டுவதில் பெருமுனைப்புடன் பணியாற்றிய பெரும் பண்பாளர்.
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மதவாத சக்திகள் கைப்பற்றி கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில் நாடு தழுவிய அளவில் மதவாதத்துக்கு எதிரான சமூக நீதி சக்திகள் ஓரணியாக ஒன்று திரண்டு கொண்டிருக்கும் வேளையில் மாபெரும் தோழர் ஏ.பி. பரதன் அவர்கள் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மூத்த இடதுசாரித் தோழர் ஏ.பி. பரதன் அவர்கள் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆழ்ந்த இரங்கலையும் செம்மார்ந்த இறுதி வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.