காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது: எச்.ராஜா
Recommended Video
புதுக்கோட்டை : காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தாலே நல்லது நடக்கும். தேவை இல்லாமல் இதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுகோட்டையில் உள்ள தடிகொண்ட அய்யனார் கோவில் நிலத்தை தனியார் அமைப்பு ஒன்று ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராடி வருகின்றன.
இந்த இடத்தை இன்று பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பார்வையிட்டார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, தமிழகத்தில் உள்ள 38ஆயிரத்து 635 கோவில்களை இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை பலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், காவிரி விவகாரத்தில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தால் எந்தப் பயனும் ஏற்படப் போவது இல்லை. தமிழக அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும்.
திமுக இந்த விவகாரத்தை தேவை இல்லாமல் அரசியல் ஆக்கிவருகிறது. இது தவிர்க்கப்படவேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மாவோயிஸ்ட் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தை பயிற்சி மையமாகப் பயன்படுத்திவருகின்றன. இதை ஒடுக்க எடப்பாடி அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர் கமல் கட்சி தொடங்கி இருப்பதற்கு வாழ்த்துகள். அவரது கட்சியால் யாருக்கும் எந்தப்பயனும் இல்லை. ஆனால், அந்தக் கட்சியால் பாதிப்பு திமுகவிற்கு தான் என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார்.