ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முக்கிய ஆலோசனை வழங்கியவர் அனில் மாதவ் தவே!
டெல்லியில் இன்று காலமான மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதில் முக்கிய பங்காற்றினார்.
சென்னை : டெல்லியில் இன்று திடீரென காலமான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில்மாதவ் தவே ஜல்லிக்கட்டு போராட்டத்தை நிதானமாக கையாண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வித்திட்டவர்.
பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வந்த அனில் மாதவ் தவே கடந்த ஜுலை மாதம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்தத்துறையின் இணை அமைச்சராக இருந்த போதும் சுயமாக முடிவெடுக்கும் தனி சுதந்திரம் அனில் மாதவ் தவேவிற்கு வழங்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்ற போது அதை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு திண்டாடிக் கொண்டிருந்தது. மேலும் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் கைபிசைந்து நின்றது மத்திய அரசு.
இந்த காலகட்டத்தில் மிகுந்த நிதானமாக செயல்பட்ட அமைச்சர் அனில் மாதவ் தவே ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த மாநில அரசு சட்டம் இயற்றினாலே போதும் என்ற கருத்தை பிரதமருக்கு எடுத்துச் சொல்லியதே இவர் தான் என்று சொல்லப்படுகிறது. ஜல்லிக்கட்டு தடையின்றி நடத்த பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது பீட்டா ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதாரங்கள் பெற்று வரும் இந்த அமைப்பு எப்போதுமே ஜல்லிக்கட்டுக்கு தடையாக உள்ளது, எனவே மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு பீட்டாவை தடை செய்வது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மக்கள் தெரிவிக்கும் எதிர்ப்பை மத்திய அரசு கவனத்தில் கொண்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.