தந்தை பெரியார் பிறந்தநாள்.... ஓபிஎஸ் மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை #HBDPeriyar
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
சென்னை: தந்தை பெரியாரின் 139-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள், இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது ட்விட்டர் பக்கத்தில், பகுத்தறிவு தந்தை, பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் 139-வது பிறந்தநாள். திராவிட இயக்கத்தின் தந்தையை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார். சென்னையில், அண்ணாசாலையின் ஜெமினி பாலத்திற்கு கீழே உள்ள பெரியாரின் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சிம்சன் பெரியார் சிலைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், அதிமுக (அம்மா) துணை பொதுச்செயலர் தினகரன், எம்ஜிஆர், அம்மா, தீபா பேரவையின் தீபா ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பகுத்தறிவு தந்தை, பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் 139-வது பிறந்தநாள். திராவிட இயக்கத்தின் தந்தையை வணங்குகிறேன்.#HBDPeriyar
— Edapadi KPalaniswamy (@CMOTamilNadu) September 17, 2017
தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தந்தை பெரியார் உருவபடத்துக்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மதிமுக சார்பில் தலைமைக் கழகமான தாயகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு அக்கட்சி துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.













Click it and Unblock the Notifications