பிளாஸ்டிக் முட்டை, அரிசி... தமிழகத்தை கதிகலங்க வைத்த வதந்திகள் 2017!
பிளாஸ்டிக் முட்டை, அரிசி, பாலில் கலப்படம் என்று தமிழகத்தை பல வதந்திகள் கதிகலக்கின.
சென்னை : 2017ம் ஆண்டில் தமிழகத்தில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நினைவாடினாலும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரிசியிலேயே பிளாஸ்டிக் அரிசி இருப்பதாக கிளம்பிய வதந்தி தான் பலரும் சாப்பாட்டில் கை வைக்கும் போதே பீதியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தது.
2017ம் ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் அசை போட இந்த 365 நாட்களில் தமிழகத்தில் பல விஷயங்கள் அரங்கேறின. அரசியல் அரங்கில் பல மாற்றங்கள், ஒரே ஆண்டில் 2 முதல்வர்கள் என்று ஆட்சி பங்கு போடப்பட்டது. ஜூலை மாதத்தில் மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி சட்டத்தால் தொழில் பாதிப்பு, டாஸ்மாக் போராட்டத்தில் பங்கேற்றதால் திருப்பூரில் பெண்ணிற்கு கண்ணத்தில் அறை என்று மக்களை பாதிக்கும் பல சமூக அவலங்களும் அரங்கேறின.
அன்றாட நிகழ்வுகளில் வந்த மிகப்பெரிய பாதிப்பு என்றால், அது இந்த ஆண்டில் கிளப்பி விடப்பட்ட வதந்திகள் தான். பாலில் கலப்படம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இதை அமைச்சர் ஒருவரே அதிகாரப்பூர்வமாக அமைச்சரே கூறி இருந்தார்.

மக்களை பீதியடைய வைத்த பால் கலப்படம்
ஆனால் பாலில் கலப்படம் என்பதோடு முடிக்காமல் பிணத்தை பதப்படுத்த பயன்படுத்தப்படும் formaldehyde ரசாயனம் பாலில் கலக்கப்படுவதாக பகீர் கிளப்பினார் அமைச்சர். இதனால் மக்கள் பீதியடைய அதன் உண்மைத் தன்மை என்ன என்பது தெரியாமல் தனியார் நிறுவனங்கள் கோர்ட்டில் வைத்து வழக்கை வாதாடி அமைச்சரின் வாய்க்கு பூட்டு போட்டன.

கடைசி வரை தெளிவாகவில்லை
பாலில் கலப்படம் இருப்பது உண்மை என்று ஒரு மாதம் ஓயாமல் சொன்ன அமைச்சரோ, அது பற்றி அதன் பிறகு எந்த ஆதாரத்தையும் தந்து தங்கள் தரப்பு வாதத்தை உண்மை என நிரூபிக்கவில்லை. கடைசி வரை மக்களுக்கு பாலில் ரசாயன கலப்படம் செய்யப்படுகிறதா என்ற உண்மை தெரியாமலே போய்விட்டது.

முட்டையில் பிளாஸ்டிக்கா என சர்ச்சை
கோழி முட்டை, நாட்டுக்கோழி முடை, பிரவுன் முட்டை என்று விதவிதமான முட்டைகள் சந்தையில் கிடைத்தன. இந்த ஆண்டில் மக்களை அச்சுறுத்தியது பிளாஸ்டிக் முட்டை சர்ச்சை. முட்டையை உடைத்துப் பார்த்தால் உடையவில்லை, மேல்புற ஓட்டை நீக்கினால் பிளாஸ்டிக் போன்ற ஜவ்வு இருக்கிறது என்று பீதியை கிளப்பினார்கள். இதனால் முட்டையை எப்படி சோதித்து பார்த்து வாங்குவது என்ற யோசனைகள் வாட்ஸ் அப்பில் சூடு பறந்தன.

சாதத்தை வைத்து பந்து விளையாடி வீடியோ
கார்ப்பரேட் கம்பெனிகள் கிளப்பிவிட்ட அடுத்த வதந்தி பிளாஸ்டிக் அரிசி. பிளாஸ்டிக்கில் அரிசி தயாரித்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த அரிசியில் சாதம் வடித்து அவற்றை உருட்டி விளையாடி வீடியோ எடுத்து பரப்பி விட்டனர் பலர். விஞ்ஞான ரீதியில் இதற்கான விளக்க வீடியோக்களும் வெளியாகின.

விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள்
பிளாஸ்டிக்கை எவ்வளவு சூட்டில் வேகவைத்தாலும் வேகாது என்று தெளிவுபடுத்தும் வீடியோக்களும் வெளியாகின. எனினும் மக்களின் அச்சம் காரணமாக அரிசி கடைகளில் அதிகாரிகளின் ஆய்வு நடத்தி மக்களின் பீதியை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தது.












Click it and Unblock the Notifications