தேர்வில் தோல்வியால் மனகுழப்பமா? 104க்கு போன் செய்யுங்கள்!
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் முதன்மை பெற்றவர்கள், சாதனை படைத்தவர்கள் பற்றிதான் பெரும்பாலானவர்கள் பேசுகின்றனர்.
பெரும்பாலான மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர். 1150 க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளின் சிலர் கூட இன்னும் 20 அல்லது 30 மதிப்பெண்கள் எடுத்து இருக்கலாமே என்று நினைக்கிறார்கள். இது அவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இந்த மன அழுத்தம் உடனே மாறி, மனம் வேறு விஷயங்களுக்கு சென்று விட்டால் பிரச்சினை இல்லை. மாறாக மன அழுத்தம் அதிகரிக்கும்பட்சத்தில் மாணவ, மாணவிகள் தற்கொலை போன்ற விரும்பத்தகாத முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.
மதிப்பெண் குறைந்து விட்டது அல்லது தேர்வில் தோல்வி ஏற்பட்டு விட்டது என்பதற்காக உயிரை மாய்த்துக் கொள்வது என்பது கோழைத்தனமான செயல். பெற்றெடுத்து வளர்த்து, இத்தனை நாளாக பாசம் காட்டிய பெற்றோர்களை காலமெல்லாம் கதற வைக்கும் இத்தகைய செயல்களில் மாணவ, மாணவிகள் ஈடுபடக்கூடாது என்பதற்காக தற்கொலையை தடுக்கும் பல அமைப்புகள் உள்ளன.
மன அழுத்தத்தில் உள்ளவர்களை ஆறுதல்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் தமிழக அரசு 104 எனும் மருத்துவ உதவி சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி இந்த சேவையை தொடங்கி வைத்தார்.
104 சேவையை மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் பயன்படுத்தலாம். அதாவது 104 என்ற போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினால், மன அழுத்தம் ஏற்பட்டுள்ள மாணவ , மாணவிகளுக்கு மன நல ஆலோசகர்கள் பல்வேறு ஆலோசனைகளை கொடுப்பார்கள். குறைவான மதிப்பெண் பெற்றதால் ஏற்பட்ட கவலையை அவர்கள் போக்கச் செய்வார்கள்.












Click it and Unblock the Notifications