தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. சீட் வெற்றி பெற முடியுமா? விஜயகாந்த், வைகோவுக்கு அன்புமணி கேள்வி
சென்னை: தமிழத்தில் தகுதியான மாற்று கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் வைகோ, விஜயகாந்த் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. சீட் வெற்றி பெற முடியுமா? என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அன்புமணி பேசுகையில், தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத சூழல் இப்போது நிலவுகிறது. அதிமுக, திமுகவுக்கு எதிரான அலை வீசுகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால், ஆக்கிரமிப்புகளை அகற்றி மன்னர் காலத்தில் இருந்தது போல குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்போம்.
விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன், கம்யூனிஸ்டு கட்சிகள், பாஜக, காங்கிரஸ் ஆகிய எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. சீட் வெற்றி பெற முடியுமா' என்று கூறினார். மேலும் தமிழகத்தில் தகுதியான மாற்றுக் கட்சி பாமக தான். தைரியமாக களத்தில் இருக்கும் ஒரே கட்சி பாமகதான். வருகிற சட்டமன்ற தேர்தலில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார்.
பாமகவின் தலைமையையும், அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்றுக் கொள்ளும் அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறோம் என்று ராமதாஸ் பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் யார் யாருடன் கூட்டணி அமைக்க இருக்கின்றனர் என்று முடிவாகதா சூழலில் தமிழகத்தில் நாங்கள் தான் தகுதியான மாற்றுக் கட்சி என்றும் திமுக, அதிமுக அல்லாத தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ், தமாகா உள்ளிட்ட கட்சிகள் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. சீட் வெற்றி பெற முடியுமா? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.