மதுரை: விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்: ஒப்பந்ததாரர் கைது
மதுரை: மதுரையில் விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மஞ்சள்மேட்டு காலனியை சேர்ந்தவர் முனியாண்டி 28. திருவண்ணாமலையை சேர்ந்தவர் விஸ்வநாதன் 30. இருவரும் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களாக பணி புரிந்தனர்.
மதுரை எச்.எம்.எஸ். காலனியில் உள்ள கழிவுநீர் ‘லிப்டிங்' மையத்தில் நேற்று திடீரென அடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய் யும் பணியில் முனியாண்டியும், விஸ்வநாதனும் ஈடுபட்டனர். அப்போது 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கி அடைப்பை சரிசெய்த முனியாண்டிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற விஸ்வநாதன் முயன்றார். அவரும் உள்ளே விழுந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த மற்ற தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இறந்த நிலையிலேயே 2 தொழிலாளர்களையும் மீட்டனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இறந்த இருவரின் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.
உறவினர்கள் போராட்டம்
இறந்த தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதால் அவர்களுக்கு நஷ்டஈடு கோரி உடலை எடுக்கவிடாமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி ஆணையர் நேரில் வந்து நஷ்டஈடு வழங்கவும், அவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கு மாநகராட்சியில் பணி வழங்கவும் உறுதியளிக்க வலியுறுத்தினர்.
மாநகராட்சி தலைமைப் பொறியாளர் மதுரம் மற்றும் அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சு நடத்தினர். அவர்களுடைய சமாதானத்தை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. அதனால், அங்கு பதற்றம் அதிகரித்தது.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்குவதாக உறுதியளித்தார். அதனால், போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீஸார் விசாரணை மேற்கொண்டார். இறந்த முனியாண்டிக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். விஸ்வநாதனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. நேற்று மாலை வேலை முடிந்ததும் ஊருக்கு புறப்பட இருந்தார் என் றும் அதற்குள் அவர் இறந்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
மாநகராட்சி ஆணையர் உறுதி
2009ல் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிக்கவும், இதில் ஈடுபட்டு இறந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2003ம் ஆண்டில் இருந்து இந்த மனிதக் கழிவுகளை அற்றும்போது இறந்தவர்கள் குடும்பங்களை அடையாளம் கண்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், வாரிசுதாரர்களில் ஒருவருக்கு குலத்தொழில் அல்லாத ஒரு அரசுப் பணி வழங்கவும், இந்த முறையை முற்றிலும் ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் 2013ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு கையால் மலம் அள்ளும் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படியே நேற்று மதுரையில் இறந்த இந்த 2 தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.
சம்பவத்திற்கு காரணமான ஒப்பந்ததாரரையும், மாநகராட்சி அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி, உடல்களை வாங்க மறுத்து நேற்று இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஒப்பந்ததாரர் தாஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.