முன்விரோதத்தால் விழுப்புரம் பாஜக நிர்வாகி ரவுடி ஜனா கொலை- புதுவை அஸ்வின் உட்பட 5 பேர் கைது!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியான ரவுடி ஜனா படுகொலையில் புதுவையைச் சேர்ந்த அஸ்வின் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்தவர் ரவுடி ஜனா. விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த 4-ந் தேதி ஆஜராகிவிட்டு மோட்டார் சைக்கிளில் புதுச்சேரிக்கு புறப்பட்டபோது விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் இறக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஜனா கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனா கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முன்விரோதத்தால் ரவுடி ஜனா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
ரவுடிகளிடையே மோதல்
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி ராஜ்குமார் கோஷ்டிதான் ஜனாவை கொலை செய்தது தெரியவந்தது. வடமாவட்டங்களில் தாதா மணிகண்டன், ராஜ்குமார் என்ற 2 கோஷ்டிகளுக்கிடையே நீண்டகாலம் மோதல் இருந்து வந்துள்ளது.
தாதா வலதுகரம் ஜனதா
இதில் இதுவரை 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் தாதா மணிகண்டனின் வலதுகரமாக இருந்தவர்தான் ரவுடி ஜனா. இதனால் தாதா மணிகண்டனையும், ஜனாவையும் போட்டுத் தள்ள ராஜ்குமார் தரப்பு முயற்சித்தது. இதற்கான ஸ்கெட்ச் சிறைக்குள்ளேயே போடப்பட்டிருக்கிறது.
முந்திக் கொண்ட ராஜ்குமார்
ராஜ்குமார் தரப்பை தாதா மணிகண்டன் கோஷ்டியும் பழிதீர்க்க முயற்சித்தும் இருக்கிறது. இதில் ராஜ்குமார் தரப்பு முந்திக் கொண்டு ரவுடி ஜனாவை போட்டுத் தள்ளியதாம்.
5 பேர் கைது
ஜனாவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய புதுச்சேரியைச் சேர்ந்த அஸ்வின் உட்பட 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.